திருவனந்தபுரம்: பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் கேரளாவில் உள்ள 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் அலுவலகங்களிலும் அதன் தலைவர்களின் வீடுகளிலும் மத்திய அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
வடக்கு ஆசிய நாடுகளில் இருந்து இந்த அமைப்பின் தலைவர்களுக்கு பெருந்தொகை அனுப்பப்பட்டுள்ளது என்றும் அதைக் கொண்டு நாட்டில் பல்வேறு மோதல்களை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கலாம் என்றும் தங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளதாக அமலாக்க முகமை கூறியுள்ளது. அந்தத் தகவலின் பேரில் சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது சில முக்கிய ஆதாரங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் அனிஸ் அகமது, தங்கள் மீதான குற்றச்சாட்டில் சிறிதும் உண்மை இல்லை என்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது ஒருவகை மலிவான துன்புறுத்தும் உத்தி என்றும் சங்கப்பரிவார் அமைப்புகளின் தூண்டுதல் காரணமாக மத்திய அமலாக்க முகமை இவ்வாறு செயல்படுவதாகவும் அவர் மேலும் சாடி உள்ளார்.
அமலாக்க முகமையின் விசாரணைக்கு தங்கள் அமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாக 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் செயலாளர் ஒஎம்ஏ சலாம் கூறினார்.
கண்ணூர், முவாட்டுபுழா, மலப்புரம், இடுக்கி ஆகிய நான்கு நகரங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சோதனை நடத்தப்பட்ட இடங்களில் ஒன்றுகூடி அமலாக்கத்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்ட மசோதாவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் வேறு சில சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற போராட்டங்களையும் அந்த அமைப்பு தூண்டிவிட்டதாக அமலாக்க முகமை கருதுகிறது.
இதற்கான நிதி முறைகேடான பணப்பரிவர்த்தனை மூலம் அந்த அமைப்பின் தலைவர்களுக்கு வந்து சேருவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.