அமராவதி: நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆந்திர மாநில அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் வார இறுதியில் அல்லது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பல மாநிலங்களில் மக்கள் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆந்திராவில் கட்டுக்குள் இருந்த கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து நாள்களில் மட்டும் நான்காயிரத்துக்கும் அதிகமானோரை கிருமி தொற்றியுள்ளது.
இதையடுத்து, இரவு 11 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா ஒரு கொரோனா மையத்தை நிறுவ வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் பத்தாயிரத்துக்கும் கீழ் பதிவாகி வந்த அன்றாடத் தொற்று எண்ணிக்கை, கிடுகிடுவென அதிகரித்து, தற்போது 33,470ஆக உள்ளது. நேற்று முன்தினம் அங்கு மேலும் எட்டு பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகிவிட்டனர்.
கர்நாடகாவில் வெகுவாக குறைந்திருந்த தொற்று எண்ணிக்கை நேற்று முன்தினம் 12 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அங்கும் இரவு, வார இறுதி நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் கிருமி தொற்றியுள்ளது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெல்லி, மும்பை, கோல்கத்தாவில் எதிர்வரும் 15ஆம் தேதி கொரோனா தொற்று உச்சத்தை அடையும் என கான்பூர் இந்திய தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் மனீந்தர் அகர்வால் எச்சரித்துள்ளார்.
எனினும், மக்கள் பீதி அடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். "பிப்ரவரி முதல் வாரம் வரை எந்த அளவுக்கு உச்சத்தில் இருக்கிறதோ, அதேபோன்று மார்ச் மாத மத்தியில் தொற்றுப்பரவல் வெகுவாகக் குறையும்," என்று மனீந்தர் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லியில் உணவகங்கள், தனியார் அலுவலகங்களை மூட வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
மாநிலத்தில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 23%ஆக அதிகரித்துள்ளது. இதயைடுத்து, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.