புதுடெல்லி: குவாட் உச்ச மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் தோக்கியோ செல்கிறார். அங்கு இரு தினங்களில் 23 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
குவாட் அமைப்பை இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கி உள்ளன.
நாளை இந்த அமைப்பின் உச்ச மாநாடு தோக்கியோவில் நடைபெற உள்ளது. உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஆகியோர் கலந்துகொள்வது உறுதியாகி உள்ளது.
இந்தப் பயணத்தின்போது பிரதமர் மோடி நாற்பது மணி நேரம் ஜப்பானில் தங்கி இருப்பார் என்றும் அதற்குள் 23 நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் அவர் தனித்தனியே சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இம்முறை குவாட் உச்ச மாநாட்டில் உக்ரேன் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.