மேகாலயா காவல்துறை: 73 பேர் கைது; 6 சிறார் மீட்பு; 36 வாகனங்கள், மது பறிமுதல்
காரோ ஹில்ஸ்: மேகாலயா மாநிலத்தில் பாஜக அரசியல்வாதி ஒருவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் பாலியல் தொழில் நடந்ததாகக் கூறி அந்த மாநில காவல்துறை 73 பேரைக் கைது செய்து இருக்கிறது.
அந்த வீட்டிலிருந்து சிறார் ஆறு பேர் மீட்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது.
அந்தப் பண்ணை வீடு மேகாலய மாநில பாஜக துணைத் தலைவர் பெர்னார்டு மராக் என்பவருக்குச் சொந்தமானது.
அது மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது. கைதான அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்படுவதாக மேற்கு காரோ ஹில்ஸ் மாவட்ட காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
பாலியல் தொழிலின் காரணகர்த்தாவாகக் கருதப்படும் பெர்னார்டு தலைமறைவாகி உள்ளார். ஷில்லாங் சாதார் காவல் நிலையத்தில் முன்னிலையாகப் போவதாக அவர் தெரிவித்து இருந்தார்.
ஆனால், அங்கு அவர் வரவில்லை என்று காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
ஒரு சிறுமியைக் காணவில்லைஎன்று 2022 பிப்ரவரி 22ஆம் தேதி புகார் தெரிவிக்கப்பட்டது. அந்தப் புகார் தொடர்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையையொட்டி பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
பெர்னார்டுக்கு எதிராக பல வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது என்றாலும் அவரை கைது செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அந்தப் பண்ணை வீடு பாலியல் தொழிலுக்குத் தோதாக மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது. அதிகாரிகள் நடத்திய சோதனையில் 36 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 416 மதுபானப் போத்தல்கள், 47 கைப்பேசிகள், ஆணுறைகள் முதலான பலவும் அதிகாரிகளிடம் சிக்கி இருக்கின்றன.
பண்ணை வீட்டின் உரிமையாளரான பெர்னார்டு மீது ஏற்கெனவே 25 குற்றவியல் வழக்குகள் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.
பெர்னார்டு 2000ஆம் ஆண்டில் கலைக்கப்பட்ட 'அச்சிக் தேசியத் தொண்டூழிய மன்றம் (பி)' என்ற தீவிரவாத அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார் என்றும் காவல்துறை கூறுகிறது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைப் பெர்னார்டு மறுத்து வருகிறார். "மேகாலயாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆகையால், என்னைப் பழி வாங்குவதற்காக அந்த ஆட்சி, காவல்துறையை ஏவி விட்டு இருக்கிறது.
"முதல்வர் கே சங்மா தன் மீது களங்கம் கற்பிப்பதற்காக அரசியல் ரீதியில் தன்னைப் பழிவாங்க முயன்று வருகிறார்," என்று பெர்னார்டு தெரிவித்து உள்ளார்.
பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நான்கு சிறுவர்களும் இரண்டு சிறுமிகளும் அந்த வீட்டில் இருந்த பதுங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
பண்ணை வீட்டு உரிமையாளரான பெர்னார்டு காவல்துறைக்கு உரிய ஒத்துழைப்பைத் தரவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.