ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநில ஓய்வு விடுதியில் வரவேற்பாளராக வேலைபார்த்த அங்கிதா பண்டாரி எனும் 19 வயதுப் பெண் கொலைசெய்யப்பட்டதை அடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியாவின் ஓய்வு விடுதியில் அங்கிதா வேலை பார்த்தார்.
அவரது சடலம் கால்வாய் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டார்.
பிரேதப் பரிசோதனையில் அங்கிதா நீரில் மூழ்கி இறந்ததாகவும் அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கிதாவின் குடும்பத்தினர் அவரது உடலை தகனம் செய்ய மறுத்து நீதிகேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பச் சூழலால் கல்வியைத் தொடர முடியாமல் வேலைக்குச் சேர்ந்த அங்கிதா தனது முதல் மாதச் சம்பளத்தைக்கூட வாங்கவில்லை என்று உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்-கேதார்நாத் நெடுஞ்சாலையில் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் நேற்று மாலை, குடும்பத்தினர் அங்கிதாவின் இறுதிச் சடங்குகளை நடத்த ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் கூட்டம் சேராமல் கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதாகவும் என்டிடிவி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.