திருவனந்தபுரம்: கேரளாவில் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளில் அம்மாநில காவல்துறை நேற்று முன்தினம் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது மடிக்கணினிகள், கணக்கு விவரங்கள், கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கண்ணூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சோதனை நடைபெற்றது என்றும் கடந்த வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை தொடர்பாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதச் செயல்களை ஊக்குவிக்க நிதியுதவி செய்ததாகவும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பின் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றம்சாட்டி உள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் அந்த அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோரை புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தக் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின்போது பல வாகனங்கள் எரிக்கப்பட்டன. அரசுப் பேருந்துகள் மீது சிலர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். கடைகளைத் திறந்து வைத்திருந்த வியாபாரிகள் மிரட்டப்பட்டனர்.
இந்நிலையில், முழு அடைப்பின்போது 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' அமைப்பைச் சேர்ந்தவர்கள் முகமூடி அணிந்துகொண்டு, 'கொரில்லா' தாக்குதலில் ஈடுபட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார்.இவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட யாரும் தப்ப முடியாது என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'வுடன் தொடர்புள்ள நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது பயங்கரவாதச் செயல்களுக்கு உதவும் வகையில் அந்நிறுவனங்கள் சுமார் ரூ.120 கோடி நிதி திரட்டி, அதை வங்கிகளில் செலுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இத்தொகை உள்நாட்டிலும் வளைகுடா நாடுகளிலும் திரட்டப்பட்டுள்ளது. 'ஹவாலா' முறையில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது.