புதுடெல்லி: சமூக ஊடகங்கள் மூலமாக விளம்பரங்களை வெளியிட்டு, ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதை டெல்லி காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து, ஆயுத விற்பனைக் கும்பலைக் கைது செய்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதாக அண்மையில் காவல்துறைக்கு தெரியவந்தது.
இதுதொடர்பான விளம்பரங்கள் முகநூல், வாட்ஸ் அப் மூலம் வெளியிடப்படுவதும் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் மூலம் கைத்துப்பாக்கிகள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் பரப்பப்பட்டது தெரிய வந்தது.
அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கலா ஜாத்தேரி என்ற ரவுடியின் பெயரில் விளம்பரங்கள் வெளியாகி வந்தன. மூன்று கைப்பேசி எண்களைப் பயன்படுத்தி மூன்று வெவ்வேறு ஃபேஸ்புக் பக்கங்கள் திறக்கப்பட்டதும் வெவ்வேறு விதமான விளம்பரங்கள் வெளியிடப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.