உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த சோகம்; மேலும் பலர் படுகாயம்
லக்னோ: பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் விபத்தில் சிக்கி கவிழ்ந்ததில் 28 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள கதம்பூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது.
அங்கு வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் உன்னாவ் பகுதியில் உள்ள புகழ்பெற்ற சண்டிகா தேவி கோவிலிலுக்குச் சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் முடிந்த பின்னர், நேற்று முன்தினம் டிராக்டரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு வேளையில் பாஹாதுனா பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்றில் சென்றுகொண்டிருந்த டிராக்டர் மீது லாரி ஒன்று வேகமாக மோதியது. இதில், அந்த டிராக்டர் அருகில் உள்ள குட்டையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிராக்டரில் பயணம் செய்த பக்தர்கள் பலர் வாகனத்தின் கீழ் சிக்கிக்கொண்டனர். தங்களுடன் கோவிலுக்கு வந்தவர்கள், கண் முன்னே உடல் நசுங்கி உயிரிழந்ததைக் கண்ட சிலர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பினர். தகவலறிந்து விரைந்து வந்து காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 28 பேர் பலியாகிவிட்ட நிலையில், மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 11 பேர் பெண்கள், 11 பேர் குழந்தைகள் எனத் தெரிய வந்துள்ளது.
சாலை விபத்தில் பக்தர்கள் பலியான சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
"கான்பூர் டிராக்டர் விபத்து சம்பவம் குறித்து அறிந்து மிகவும் துயருற்றேன். உள்ளூர் நிர்வாகத்தினர் துரிதமாகச் செயல்பட்டு, தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
"விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்," எனப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.