மும்பை: ஆரஞ்சுப் பழங்களை ஏற்றிச் செல்வதாகக் கூறி போதைப் பொருள்களைக் கடத்திய கும்பல் ஒன்று மகாராஷ்டிராவில் சிக்கியது.
மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ரூ.1476 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
நேற்று முன்தினம் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வஷி பகுதியில் லாரி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து லாரியில் வந்தவர்களை விசாரித்தனர்.
ஓட்டுநர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் மும்பை வருவாய் நுண்ணறிவு இயக்குநரக அதிகாரிகளின் சந்தேகம் வலுத்தது. இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுப் பழங்கள் மட்டுமே லாரியில் இருப்பதாக ஓட்டுநர் தெரிவித்தார்.
இதையடுத்து லாரியில் சோதனையிட்டபோது, ஆரஞ்சுப் பழங்கள் இருந்த மரப்பெட்டிகளுக்குள் 198 கிலோ எடை கொண்ட மெத்தாம்பெட்டமைன், ஒன்பது கிலோ எடையுள்ள அதிக தூய்மையான கோகைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றின் அனைத்துலகச் சந்தை மதிப்பு ரூ.1,476 கோடி எனத் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து ஆரஞ்சுப் பழங்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படுபவரிடம் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.