ஹைதராபாத்: விமானம் தரையிறங்கியபோது பயணிகள் அமர்ந்துள்ள பகுதியில் இருந்து திடீரென புகை மூண்டதால் பீதி நிலவியது.
ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புதன்கிழமை இரவு கோவாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரெனப் புகை மூண்டதை அடுத்து, அது பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் தரையிறங்கியது.
அந்த விமானத்தில் 86 பயணிகள் இருந்தனர். புதன்கிழமை இரவு 11 மணியளவில் அது ஹைதராபாத்தில் தரையிறங்கியது.
முன்னதாக, ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய ஒன்பது விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
அண்மைய சில மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான சில சம்பவங்கள் எழுந்துள்ளன.
இத்தகைய குறைபாடுகளைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஹைதராபாத்தில் விமானம் தரையிறங்கியதும் அவசர கால வழியின் மூலம் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அப்போது ஒருவர் லேசாக காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விமானப் போக்குவரத்து ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.