திருவனந்தபுரம்: வளைகுடா நாடான அபுதாபியில் தாதியாகப் பணிபுரிந்து வரும் லவ்லி மோள் அச்சம்மாள் (படம்) மீது 20 மில்லியன் திர்ஹாம் அதாவது ரூ.45 கோடி அளவுக்கு அதிர்ஷ்ட மழை பொழிந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவரான லவ்லி மோள் அச்சம்மா, அபு தாபியில் கடந்த 21 ஆண்டு களாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தாதியான இவர், அவ்வப்போது அபுதாபியில் வெளியிடப்படும் லாட்டரி சீட்டை வாங்குவது வழக்கம்.
இவர் அண்மையில் வாங்கியிருந்த லாட்டரி சீட்டின் குலுக்கல் முடிவு கடந்த சனிக்கிழமை வெளியானது. இதில் முதல் பரிசாக ரூ.45 கோடியை லவ்லி வென்றுள்ளார். “தாங்கொணாத மகிழ்ச்சியில் உள்ளேன். இந்தப் பணத்தின் ஒரு பகுதியில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி ஏழைகளுக்கு உதவுவேன். பணத்தை உறவினர்களுடன் பகிர்ந்துகொள்வேன். எனது மைத்துனருக்கும் பங்கு கொடுப்பேன். ஒவ்வொரு மாதமும் எனது கணவர்தான் லாட்டரி சீட்டு வாங்குவார். இம்முறை நான் வாங்கிய சீட்டுக்கு அதிர்ஷ்டம் விழுந்து உள்ளது,” என்று கூறியுள்ளார்.