புவனேஸ்வர்: ஒடியா திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் என்ற துது நாயக், என்பவர் பெண் செய்தியாளர் ஒருவரிடம் தகாதமுறையில் நடந்துகொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக காவல்துறை விசாரணைக்கு வருமாறு தயாரிப்பாளர் துது நாயக்குக்கு தகவல் தெரிவித்தும் அவர், முன்னிலையாகவில்லை. அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஒடியா மொழித் திரைப்பட வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளராக தேபஸ்மிதா ரூத் என்ற பெண் வந்திருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர் தேபஸ்மிதா கூறுகையில், படத் தயாரிப்பாளர் திடீரென என்னைத் தாக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சியில், எனது மைக் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை கீழே போட்டுவிட்டேன்.
கீழே விழுந்த எனது பொருள்களை எடுக்க குனிந்தபோது, படத் தயாரிப்பாளர் துது நாயக் என்னை பின்னால் அடித்துவிட்டார். அவர் ஏன், அப்படி என்னிடம் நடந்துகொண்டார் என்பது எனக்குப் புரியவில்லை என்று கூறினார்.
இதனை தொடர்ந்து, துது நாயக் மீது 354, 323, 341 மற்றும் 294 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து, அவரை கைது செய்தனர். அவருக்கான பிணை மனு விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அவருக்கு எதிராக 14 நாட்கள் நீதிமன்றக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அவர் ஜர்படா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஒடிசாவின் பெண் செய்தியாளர்களுக்கான அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து, துணை காவல் ஆணையாளரிடம் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகாரில், படத்தயாரிப்பாளர் நடந்துகொண்ட சம்பவம் பற்றி முறையான விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். இதுபற்றி ஒடியா மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, 15 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தப் பிரச்சினை ஒடியா மாநிலத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கர்வெல் நகர் காவல்நிலையத்தில் காணப்பட்ட திரைப்பட இயக்குனர் சுதாகர் பசந்த், இந்த விவகாரத்தில் நாயக் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எனவே, இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்துகொள்ள கொஞ்சம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.