திருப்பதி: புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஆனால், இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் கூறியதால், கோபமடைந்த பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழுமலையானை தரிசிக்க கடந்த 22ஆம் தேதி முதல் 4 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இந்த டிக்கெட்டுகளை வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே 10 நாள்களாக தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், “இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தரிசனத்திற்கு வரவேண்டாம்,” என ஆலய நிர்வாகம் அறிவித்தது.
இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை இரவு புத்தாண்டையொட்டி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் இறை தரிசனம் செய்ய வந்தனர். ஆனால், அங்கிருந்த அதிகாரிகள் இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால், பக்தர்களுக்கும் கோவில் ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது. அத்துடன், திருப்பதி ஆலய அலுவலகத்தையும் பக்தர்கள் முற்றுகையிட்டனர்.
இலவச தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தொடர்ந்து தெரிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பக்தர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதையடுத்து, ஆலய அதிகாரிகள் பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததைத் தொடர்ந்து பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023ஆம் ஆண்டு ஏழுமலையான் கோவிலில் 2 கோடியே 52 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும் கடந்த ஆண்டு உண்டியல் காணிக்கையாக ரூ.1,398 கோடி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.