பெங்களூரு: இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் நூலிழையில் உயிர்தப்பினார் குமார் அலாங்கிரிட், 24.
அங்குள்ள பிரபல உணவகமான ‘ராமேஸ்வரம் கஃபே’யில் நிகழ்ந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் தாம் உயிர்பிழைத்ததற்கு தூரத்தில் இருந்த தம் தாயாரே காரணம் என்றார் அவர்.
தொழில்நுட்ப நிபுணரான குமார், வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டிருந்தார். அன்றைய தினம் பார்த்து அவருக்கு சமைக்க மனம் வரவில்லை.
“பொதுவாக நான் தினமும் சமைப்பேன். ஆனால், எனக்கு மிகவும் பசித்ததால் அன்றைக்கு வெளியே சென்று சாப்பிட எண்ணினேன். நான் வீட்டிலிருந்து வேலை செய்யும்போதெல்லாம், மாலை வேளையில் சிற்றுண்டி சாப்பிட வெளியே செல்வேன். எனவே, பகலில் நான் வெளியே சென்றது வழக்கத்திற்கு மாறான ஒன்று,” என்று குமார் சொன்னார்.
இட்லி, தோசை வாங்கிய அவர், மரத்திற்கு அருகே அமர்ந்தார். அங்குதான் வெடிகுண்டு வெடிக்கவிருந்தது.
“இட்லியைச் சாப்பிட்டுவிட்டு தோசையைப் பெற உணவக முகப்புக்குச் சென்றேன். அப்போது எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. யாரிடமிருந்து எனப் பார்த்தால் என் அம்மா. இந்த நேரத்தில் என் அம்மா என்னை அழைப்பது வழக்கத்திற்கு மாறானது என நினைத்தேன்,” என்றார் அவர்.
அழைப்பை ஏற்றபோது, சமிக்ஞை சரியில்லாததால் குமார் பேசுவதைக் கேட்க முடியவில்லை என அவருடைய தாயார் கூறினார். எனவே சமிக்ஞை பெற உணவகத்திலிருந்து குமார் வெளியேறினார்.
அப்போது அங்கு திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. சில நொடிகளுக்கு அப்பகுதியைக் கரும்புகை சூழ்ந்தது.
“ஏதோ பாலிவுட் படத்தில் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள நேரம் எடுத்தது.
“காயமுற்றோரை நோக்கி விரைந்து அவர்களுக்கு உதவ நான் முற்பட்டேன்,” என்று குமார் நினைவுகூர்ந்தார்.
சற்று நேரம் கழித்து தம் தாயாரிடம் இருந்து குமாருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. மகனின் பாதுகாப்பு குறித்து அவர் கவலைப்பட்டார்.
“அழைப்பை ஏற்றவுடன், என் அம்மாவுக்கு நன்றி கூறினேன். கண்ணீரைக் கட்டுப்படுத்தினேன். தாய்மார்கள் கடவுள் என அந்தத் தருணம் உணர்ந்தேன்,” என்று குமார் சொன்னார்.