புதுடெல்லி: கேலி செய்த காரணத்தால் ஏழு வயது சிறுமியின் கழுத்தை நெரித்து அவளைக் கொன்றதுடன் அவளின் உடலை 14 வயது சிறுவன் சிதைத்த அதிர்ச்சி சம்பவம் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டுள்ள அந்தப் பதின்ம வயது சிறுவன் மார்ச் 8ஆம் தேதியன்று பிடிபட்டான்.
ஒரே குடியிருப்பு வட்டாரத்தில் சிறுவனும் சிறுமியும் வசித்து வந்தனர். சிறுவன் சிறுமியின் வீட்டைக் கடந்து போகும்போதெல்லாம் அச்சிறுமி கிண்டலாகப் பேசினாள்.
தனது கேலிப் பேச்சு சிறுவனைச் சினமூட்டியதை சிறுமி அப்போது உணரவில்லை.
இருப்பினும், சிறுமியின் நடத்தை தன்னைக் கோபமாக்குவதாக அந்தச் சிறுவனும் எவ்வேளையிலும் தெரியப்படுத்தவில்லை என்றனர் காவல்துறையினர்.
தாக்குதல் நடந்த நாளன்று பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்த சிறுமி, வழக்கம்போல் கேலி செய்தபோது சிறுவன் சீறிப்பாய்ந்து அந்தச் சிறுமியைத் தன் வீட்டுக்குள் இழுத்துச் சென்று கழுத்தை நெரித்தான்.
பின்னர், சுவர் மேலே அவளின் உடலைத் தூக்கி எறிந்துவிட்டு சற்று நேரம் கழித்து அங்கு சென்று சிறுமியின் தலை, முகம், உடல் ஆகியவற்றைக் கல்லைக் கொண்டு சிதைத்தான்.
சிறுமி வீடு திரும்பாததால் அவளின் பெற்றோர் அவளைத் தேடிச் சென்றனர். அப்போது சிறுமியின் சிதைக்கப்பட்ட உடலைக் கண்டனர்.
சிறார் நீதிமன்றத்தின் முன் சிறுவன் நிறுத்தப்பட்டதை அடுத்து மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பப்பட்டான்.