சென்னையில் தற்போது நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூருக்கு 'கௌரவ நாடு' என்ற சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. 39வது ஆண்டாக நடைபெறும் இந்திய புத்தகக் கண்காட்சிகளில் இந்தச் சிறப்பைப் பெறும் முதல் நாடு சிங்கப்பூர். இம்மாதம் முதல் தேதியில் இருந்து 13ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சியை தீவுத் திடலில் தென்னிந்திய புத்தக விற்பனை யாளர், பதிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய அளவில் இரண்டாவது பெரிய வர்த்தக ரீதியிலான புத்தகக் கண்காட்சியான இதில் இந்திய எழுத்தாளர்கள் மட்டுமின்றி சிங்கப்பூர் எழுத்தாளர்களும் எழுதிய புத்தகங்கள் அங்கு அறிமுகப் படுத்தப்படுகின்றன. சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தேசியக் கலைகள் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் எட்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். மேலும், சிங்கப்பூருக்கென தனியான கூடம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் குழு விவாதங்கள், வாசிப்புகள், சிங்கப்பூர் நூலாசிரியர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்படுகின்றன. சிங்கப்பூர் எழுத்தாளர்களான திரு சித்துராஜ் பொன்ராஜ், திரு ஜே. எம். சாலி ஆகியோரது புத்தகங்கள் இந்தக் கண்காட்சியில் வெளியீடு காண்கின்றன.
இந்தக் கண்காட்சியில் சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதிய சுமார் 120 தமிழ்ப் புத்தகத் தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. திரு ராம கண்ணபிரான், திரு நா. கோவிந்தசாமி, திரு பி. கிருஷ்ணன், திரு ஜே.எம் சாலி, திரு க.து.மு. இக்பால், திரு மா இளங்கண்ணன் போன்ற விருது பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை அங்கு காணலாம். இந்தக் கண்காட்சியில் சிறு வருக்கான புத்தகங்கள், ஆங்கிலப் புத்தகங்களும் உள்ளன. சிங்கப்பூர் எழுத்தாளர்களின் படைப்புகள் இந்தியாவில் பெரிதும் வாசிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட தேசியக் கலைகள் மன்றத்தின் தற்காலிக இயக்குநர் திருவாட்டி மே டான், அவர்கள் இந்திய எழுத்தாளர்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்வுகள் உதவும் என்றார்.
450 பதிப்பாளர்களின் புத்தகங்கள் 800 கடைகளில் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருப்பதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கப் பொருளாளர் திரு ஒலிவண்ணன் கூறினார். சிங்கப்பூர் தமிழ் நூல்களைச் சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்ப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த தமிழகக் கவிஞர் ஞானக்கூத்தன், இந்த அறிமுகம் விரிவாக வேண்டும் என்றார். சிங்கப்பூர் இலக்கியங்கள் தமிழகத்தில் கிடைப்பதற்கான நிரந்தர ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என கண்காட்சி யில் கலந்துகொண்ட தமிழகக் கவிஞர் மனுஷ்யபுத்திரன் கருத் துரைத்துள்ளார்.
இந்தியாவுக்கான சிங்கப்பூர் துணைத் தூதர் ராய் கோ கண்காட்சியில் அமைந்துள்ள சிங்கப்பூர் கூடத் தைத் திறந்துவைத்தார். உடன் சிங்கப்பூர், தமிழக எழுத்தாளர்கள். படம்: தேசியக் கலைகள் மன்றம்