சிங்கப்பூர் தேசிய கவிதை விழா வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைபெற உள்ளது. பல மொழி, பல தலைமுறைக் கவிஞர்களை ஒன்றிணைக்கும் இந்த மூன்று நாள் விழாவில் கவிதை வாசிப்பு, கருத்தரங்கம், போன்ற பல அங்கங்கள் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் மொழிகளில் இடம்பெறவுள்ளன. இரண்டாவது ஆண்டாக நடைபெறும் கவிதை விழாவின் தொடக்க நிகழ்ச்சி ஜூலை 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேசிய அரும்பொருளகத்தின் கேலரி தியேட்டரில் மாலை 6.00 முதல் இரவு 11 மணி வரை நான்கு மொழி கவிதை வாசிப்புடன் தொடங்கும்.
சனிக்கிழமை காலை 11 மணியில் இருந்து இரவு 8.00 மணி வரையில் ஆங்கில, சீன நிகழ்வுகள் இடம்பெறும். தேசிய அரும்பொருளகத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சிறப்புரை, பெண்கள் கவிதை குறித்த கருத்தரங்கம், 'கவிதை வாசிப்புக்கு தயாராதல்' பட்டறை, கவிதை வாசிப்பு போன்ற அங்கங்கள் ஆங்கில நிகழ்ச்சியில் இடம்பெறும். சிறுவருக்கான கவிதைகள் நிகழ்ச்சி பகல் 11.30 முதல் 1.00 மணி வரையில் சிங்கப்பூர் பூமலையில் (பொட்டானிக் கார்டன்ஸ்) நடைபெறும்.