நாட்டின் புகழ்பெற்ற சிங்கப்பூரர்கள் என 32 இந்தியர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 8ஆம் தேதியன்று நடந்த நிகழ்வில் இந்த 32 பேரும் சிறப்பிக்கப்பட்டனர்.
இதன்படி ‘Indians Hall of Fame Singapore’ என்னும் பட்டியலில் இவர்களது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னாள் அதிபர்கள் சி.வி. தேவன் நாயர், எஸ்ஆர் நாதன் ஆகியோருடன் துணைப் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர் எஸ். ராஜரத்னம், நன்கொடையாளர் நவ்ரோஜி மிஸ்ட்ரி, தொழில்முனைவர்கள் அமீரலி ஜுமாபாய் மற்றும் கர்த்தர் சிங் தக்ரல், விளையாட்டு வீரர்கள் கேசவன் சூன் மற்றும் சி.குணாளன், பரதநாட்டிய முன்னோடி கே.பி. பாஸ்கர் ஆகியோர் அந்தப் பட்டியலில் அடங்குவர்.
நாட்டு கட்டமைப்புக்கும் சமூகத்திற்கும் பெரும் பங்காற்றியோரைச் சிறப்பிக்க ஏதேனும் ஒரு நிரந்தரத் திட்டம் தேவை என்று சிந்தித்தபோது இந்த யோசனை தமக்கு வந்ததாக திட்டத் தலைவரும் ‘இந்தியன் மூவி நியூஸ்’ இதழின் முன்னாள் ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருமான திரு எஸ்.ஏ நாதன்ஜி கூறினார்.
“இன்றைய சிங்கப்பூரை உருவாக்க இந்திய சமூகம் முக்கிய பங்காற்றியது,” என்றார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தர்ஜித் சிங். திட்டத்திற்கான ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் இவர் இருக்கிறார்.
முன்னோடிகளின் பங்களிப்பை எதிர்காலச் சந்ததியினர் நினைவில் கொள்ள இந்திய சமூகத்தினர் ஆற்றிய தொண்டை அங்கீகரிக்க வேண்டும் என்றார் திரு சிங். நிகழ்ச்சியில் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளையும் வழங்கினார். பட்டியலில் இடம்பெற்ற சிலர் இல்லாத பட்சத்தில் அவர்கள் சார்பாக அவர்களின் குடும்பத்தார் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.