கொவிட்-19 தொற்றிலிருந்து தேறியோர் உடனடியாக பல்துலக்கியை மாற்றிவிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொதுவாக, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பல்துலக்கியை மாற்றிவிடுவது நல்லது என்கிறார் இந்தியாவின் குருகிராமில் உள்ள ஆர்ட்டெமிஸ் மருத்துவமனை பல்மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் அஞ்சனா சத்யஜித்.
இந்நிலையில், கொரோனா தொற்றியோர் அதிலிருந்து மீண்டதும் சற்றும் காலந்தாழ்த்தாமல் தங்களது பல்துலக்கியை வீசியெறிந்துவிட வலியுறுத்துகிறார் டாக்டர் அஞ்சனா.
"பிளாஸ்டிக் பரப்புகளில் கிருமி நெடுநேரம் உயிர்ப்புடன் இருக்கும். அதனால், கொரோனா தொற்றில் இருந்து மீண்ட ஒருவர் பல்துலக்கியை உடனே மாற்றிவிடுவது பாதுகாப்பானது. இது அவரை மீண்டும் கிருமி அண்டாமல் காக்கும். அப்படிச் செய்வது, ஒரே குளியலறையைப் பகிர்ந்துகொள்ளும் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாக்கும். நாக்கு வழிப்பான் பயன்படுத்தினால் அதையும் வீசியெறிந்து விடுங்கள்," என்கிறார் அவர்.
வாய்நலத்தைப் பேணுவது மிகவும் முக்கியம். இல்லாவிடில், கிருமிப் பரவலை அது மேலும் அதிகப்படுத்திவிடும்.
கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவரின் வாயிலிருந்து வெளிப்படும் சிறுதுளிகளின் மூலமாகவே கிருமி பெரும்பாலும் பரவுகிறது, குறிப்பாக, அவர்கள் இருமினால், தும்மினால், பேசினால் அல்லது சிரிக்கும்போதுகூட கிருமி பரவும் வாய்ப்பு அதிகம்.
அதனால், கிருமி தொற்றியுள்ளபோதும் அதன் பின்னரும் வாய்நலத்தை முறையாகப் பேணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பல் துலக்கிய பிறகு அல்லது 'ஃபிளாஸிங்' செய்த பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும். நாள்தோறும் இருமுறை பல்துலக்குவது நல்லது. வாய்க் கொப்புளிப்பானைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பிறருடன் பகிர்ந்து கொள்ளும் கழுவுதொட்டியை (sink) கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துங்கள்.