புதிய ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஊழியர்கள் சில நாள்கள் வீட்டில் இருந்தும், சில நாள்கள் அலுவலகத்தில் இருந்தும் வேலை செய்யும் நடைமுறையில் அமைப்புகள் அதிகக் கவனம் செலுத்துகின்றன. ஊழியர்களில் பலரும் அத்தகைய மாறுபட்ட நடைமுறையில் பணியாற்ற வேண்டிய சூழலில் அமைப்புகள் அவ்வாறு நடவடிக்கை எடுக்கின்றன.
ஜனவரியிலிருந்து கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால், ஊழியர்களில் பாதிப் பேர் அலுவலகத்துக்குத் திரும்ப இயலும். அவர்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயம். அதற்கு முன்னர், வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை நடப்பில் இருந்தது.
இந்நிலையில், அலுவலகத்திலும், வீட்டிலுமாக மாறி மாறி வேலை செய்யும் நடைமுறையின் கீழ், எவ்வாறு திறம்படச் செயல்படலாம் என்பதற்கான வழிமுறைகளில் அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்ய வேண்டியிருப்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படுவதால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படக்கூடும். அதனால் பயனாளர்கள் சில யோசனைகளை முன்வைக்கின்றனர்.
வீட்டில் வேலை செய்யும்போது, பொருத்தமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலிகளைப் பயன்படுத்தலாம். மடிக் கணினிகளுக்கான கூடுதல் திரைகளைச் சரியான உயரத்திலும், கோணத்திலும் அமைக்க உதவும் கருவிகளைப் பயன்படுத்தலாம். கை மணிக்கட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்க உதவும் வகையிலான விசைப் பலகைகளை பயன்படுத்தலாம். அலுவலகப் பயன்பாட்டுக்கான காதில் அணியும் ஒலிப்பான்களும் மிகவும் உதவியாக இருக்கும்.
இவை போன்ற பல்வேறு பயன்தரும் யோசனைகளால் ஊழியர்களின் உற்பத்தித்திறன் சிறப்படையும் என்று நம்பப்படுகிறது.