உலகம் முழுவதும் கொவிட்-19, கொரோனா, கொள்ளைநோய், தடுப்பூசி என்ற பேச்சே கடந்த ஈராண்டுகளுக்கும் மேலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொவிட்-19 கொள்ளைநோயைத் தடுக்கப் போட்டுக்கொள்ளப்படும் தடுப்பூசியால் விளையும் நன்மை பற்றி புதிய ஆய்வுத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கொள்ளைநோயின் தீவிரத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கும் தடுப்பூசியை மக்களுக்குப் போடும் நடவடிக்கையை உலக அரசாங்கங்கள் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன.
அவ்வாறு போடப்படும் தடுப்பூசியின் ஆற்றல் குறித்த ஆய்வுகளும் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின்' என்னும் சஞ்சிகை அமெரிக்க மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொள்ளைநோய் ஆபத்து குறைவு என்பது ஏற்கெனவே சொல்லப்பட்டு வரும் தகவல்.
அதாவது கிருமித்தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்
படுவது, உயிரிழப்பு ஏற்படுவது போன்றவற்றுக்கான வாய்ப்புகளை தடுப்பூசி குறைப்பதாகத் தகவல்.
ஆனால், இவற்றுக்கும் மேலாக தடுப்பூசி சில முக்கியமான உளவியல் நன்மைகளைத் தருவதாக இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளதாக முன்னணி ஆய்வாளர் ஜோனாதன் கோல்டாய் தெரிவித்தார்.
2020 மார்ச்சுக்கும் 2021 ஜூனுக் கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 8,090 பெரியவர்களிடம் குறிப்பாக, 2020 டிசம்பருக்கும் 2021 ஜூனுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பெரியவர்களின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.
தடுப்பூசி போட்டபின்னர் அவர்களின் மன உளைச்சலில் 7 விழுக்காடு குறைந்துள்ளதாக அந்தப் பரிசோதனையில் தெரிய வந்ததாக ஆய்வுத் தகவல் குறிப்பிட்டது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு குறைந்தது 8 வாரங்கள் வரை அவர்களின் மனநலம் மேம்பட்டு இருந்ததையும் ஆய்வு கண்டறிந்தது.
"சாதாரணமாக, தொற்று ஏற்படுவதையும் அதன் பாதிப்பையும் தடுப்பூசி குறைப்பதால் நேர்மறையான தாக்கம் ஏற்படுகிறது. தடுப்பூசியால் பாதுகாப்பை உணர்வதோடு மனஅழுத்தமும் குறைகிறது," என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.