இம்மாதம் 5ஆம் தேதி மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் களுக்காக கவிதைப் பயிலரங்கு, மொழிப்பெயர்ப்புப் பயிலரங்கு மற்றும் கவிதைப் போட்டியை கவி மாலை நடத்தியது. 35 பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து சுமார் 155 மாணவர்கள் பயிலரங்கிற்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் முதலில், கவிஞர் மோகனரங்கன், கவிதை குறித்து 'சூம்' செயலி மூலம் மாணவர்களிடம் உரையாற்றினார்.
மரபுக் கவிதைகள் துவங்கி, புதுக்கவிதைகள் உருவாகி நூறு வருடங்கள் ஆகிறது என்பதைக் கூறி, அச்சுத்தொழில் துவங்கிய பின் புத்தகங்களின் வெளியீடு என வரலாற்றுப் பின்னணியை எளிய விளக்கங்களுடனும் சிறிய உதாரணங்களுடன் புதிதாக கவிதை குறித்து அறிந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அழகாக எடுத்துக்கூறினார்.
புதுக்கவிதைகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை கவிஞர்கள் பிரமிள், தேவதச்சன் மற்றும் விக்ரமாதித்யன் கவிதை களை மேற்கோள்காட்டி கவிதை குறித்த ஒரு புரிதலை மாணவர் களுக்கு உருவாக்கினார்.
எழுதுவது எல்லாமே கவிதை யாகிவிடுவதில்லை என்றும் அதன் உருவம், உள்ளடக்கம் தொடர்பான தெளிவை உணர்த்தினார். கவிதை தொடர்ந்து வாசிக்கவேண்டிய தேவை மற்றும் ஏன் கவிதை எழுத வேண்டும் என்பதையும் தனது உரையில் அவர் முன்வைத்தார்.
தமிழ்க் கவிதைகள் குறித்து புதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உரையாக கவிஞர் மோகனரங்கனின் உரை அமைந்திருந்தது.
அடுத்த நிகழ்வாக, கவிதை மொழிபெயர்ப்பு குறித்து சிங்கப்பூர் எழுத்தாளர் கவிஞர் மஹேஷ்குமார் மாணவர்களை வழி நடத்தினார்.
வேற்று மொழிக் கவிதைகள் வாசிப்பதற்கான தேவை என்ன என்பதை ஒவ்வொன்றாக அவர் விளக்கினார்.
ஒரு புதிய உலகை அறிந்துகொள்ளவும் புதிய காட்சி, தேடல் மற்றும் வாழ்வைக் குறித்த புதிய பரிணாமத்தை உணரவும் வேற்றுமொழிக் கவிதைகள் உதவுவதாக தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.
இருமொழிப் புலமைக்கான அவசியத்தையும் தருமொழியின் நிலவியல், அரசியல் மற்றும் பண்பாடு ஆகியவை அறிந்துகொள்ள வேண்டியதன் மகத்து வத்தையும் கூறி வேற்றுமொழிக் கவிதையின் கரு சொல்லவருவதைச் சரியாகப் புரிந்துகொள்வது என மொழி பெயர்ப் புக்குத் தேவையானவற்றை தனக்கே உரிய எளிய மொழியில் மாணவர்கள் புரியும் வகையில் அவர் விளக்கினார்.
மொழிபெயர்ப்பில் கவனிக்க வேண்டிய உத்திகளையும் நடுநிலையாக நிற்க வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மொழிபெயர்ப்பில் ஒவ்வொருசொல்லாக மொழிபெயர்த்தல், சுருக்கமாக மொழிபெயர்த்தல், விரிவாக மொழி பெயர்த்தல், தழுவலாக மொழிபெயர்த்தல் மற்றும் மொழியாக்கம் ஆகியவற்றின் நிறைகளை மட்டுமல்லாது மொழிபெயர்ப்பில் காணும் இடர்களையும் சிக்கல்களையும் அவர் சுட்டினார். மொழிபெயர்ப்புத் தன்மைக்கான தெளிவு, பொருத்தம், மாறுபாடின்மை மற்றும் எளிமை ஆகியவற்றையும் அவர் விளக்கினார்.
உதாரணத்திற்கு Anaïs Nin எழுதிய Risk என்ற ஆங்கிலக் கவிதையை எடுத்துக்கொண்டு எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்பதை தனது இருவேறு மொழிபெயர்ப்பை எடுத்தாண்டு விளக்கினார். இறுதியாக, மாணவர்களுடனான கலந்துரையாடலுடன் கவிமாலையின் கவிதைப் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப்போட்டியின் முதற்கட்டப் போட்டியாக தலைப்பு மற்றும் படங்கள் கொடுத்து கவிதை எழுதும் போட்டியும் கொடுக்கப்பட்ட பத்து ஆங்கிலக் கவிதைகளைக் கொண்டு மொழிப் பெயர்ப்புக் கவிதைப் போட்டியும் கவிமாலை அறிவித்தது. (செய்தி: மோகனபிரியா)