ஊழியரணியில் மீண்டும் இணைய விரும்புவோருக்கு மனிதவளத் துறையினரின் ஆலோசனைகள்
சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வேலைக்குச் செல்லும்போது சற்று அச்சமாக இருக்கலாம். ஏனெனில், இடைப்பட்ட காலத்தில் வேலைக்கான தகுதிகளும் தேவைகளும் மாறியிருக்கலாம்.
இடைவெளிக்குப்பின் மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புவோர், சிறிது காலம் எடுத்துக்கொண்டு தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டால் வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தலாம் என்கிறார் 'மேன்பவர்குரூப்' மனிதவள நிறுவனத்தின் சிங்கப்பூர் மேலாளர் லிண்டா டியா. அத்தகையோருக்கான சில குறிப்புகள் இதோ:
திறன்களை வலுப்படுத்தவும்
வேலையைவிட்டு நிற்குமுன் ஒருவரது திறன்களும் அனுபவமும் இப்போதைய தேவைக்குப் பொருத்தமில்லாமல் இருக்கலாம். அதனால், ஒருவர் என்ன வேலைக்குச் செல்ல விரும்புகிறாரோ, அதற்குத் தேவையான புதிய தேர்ச்சிகள் என்ன என்பதை ஆராய்ந்து, கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் திருவாட்டி டியோ.
ஒருவர் தாம் முன்பு செய்த வேலைக்கோ அல்லது அதுபோன்ற வேலைக்கோ திரும்ப விரும்பினால் புத்தாக்கப் பயிற்சிகள் அவருக்கு உதவலாம். தன்னார்வத் திட்டப்பணிகளில் ஈடுபட்டு, சற்று அனுபவமும் தேர்ச்சிகளும் பெறலாம்.
குறித்த துறைக்கு அல்லது வேலைக்கு உரிய பயிற்சிகளில் சேர்ந்து ஆயத்தப்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் தாய்மார்களுக்கு ஆதரவளித்து வரும் 'மம்ஸ் அட் ஒர்க்' எனும் சமூக அமைப்பின் நிறுவனர் ஷெர்லி டோரி.
ஒருவர் புதிதாக வேலை தேடுமுன் குறைந்தது ஆறு முதல் எட்டு மாதங்களுக்குத் திட்டமிட்டு, தங்களது தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தன்விவரக்குறிப்பைப் புதுப்பிக்கவும்
அவ்வாறு தேர்ச்சிகளை மேம்படுத்திக்கொண்டபின், அவ்விவரங்களை தங்களது தன்விவரக்குறிப்பிலும் (Resume) 'லிங்க்டுஇன்' பக்கத்திலும் முன்னிலைப்படுத்தலாம்.
வேலையிலிருந்து இடைவெளி எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைத் தன்விவரக்குறிப்பில் குறிப்பிட வேண்டும் என்றும் இடைப்பட்ட காலத்தில் பயிற்சி வகுப்புகள் மூலமாக தாங்கள் கற்றுக்கொண்ட புதிய தேர்ச்சிகளை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கூறினார் 'ரேன்ஸ்டட்' ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கான மேலாண்மை இயக்குநர் ஜெயா தாஸ்.
"இடைப்பட்ட காலத்தில் ஒருவர் தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ள எடுத்துக்கொண்ட முயற்சிகளை வேலை நேர்காணலின்போது விளக்கும்போது அது நேர்காணல் செய்பவரை ஈர்த்து, வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்," என்றார் திருவாட்டி ஜெயா தாஸ்.
தெரிந்தவர்களை அணுகலாம்
வேலைக்கான போட்டி அதிகமாக இருக்கும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் தெரிந்தவர்கள் எவரேனும் இருப்பினும் அவர்மூலம் பரிந்துரைக்கப்படுவது சாதகமாக விளங்கலாம் என்கிறார் திருவாட்டி டோரி.
வேலை தேடுபவர்கள் தங்களது முன்னாள் மேலாளர்களைத் தொடர்புகொண்டு பரிந்துரைக் கடிதமும் ஆலோசனையும் பெறுவது ஒருவருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று திருவாட்டி தாஸ் கூறினார்.
'லிங்க்டுஇன்' மூலம் தங்களது தொடர்புகளை விரிவுபடுத்துவதும் நல்லது.
அதுபோல, நிபுணத்துவச் சங்கங்கள், வணிகச் சங்கங்கள், வர்த்தகச் சபைகள் போன்றவை நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஒருவர் தம்முடைய தொடர்பு வட்டாரத்தை விரிவுபடுத்தலாம்.
வேலைப்பயிற்சி வாய்ப்பு
மீண்டும் நிரந்தர வேலை கிடைக்குமுன், இடைப்பட்ட காலத்தில் குறைந்த கடப்பாடும் எதிர்பார்ப்புகளும் கொண்ட தன்னார்வ அல்லது பகுதிநேர வேலைகளைச் செய்யலாம் என்கிறார் 'ஃபாஸ்ட்கோ' ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான திரு ஜூலியன் டான்.
வேலையில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டோர் மீண்டும் ஊழியரணியில் இணைய 'ரிட்டன்ஷிப்' எனும் வேலைப்பயிற்சித் தெரிவுகள் மூலம் ஆதரவளிக்கப்படுகின்றன.
"பெரும்பாலான நேரங்களில், 'ரிட்டன்ஷிப்' வேலைப்பயிற்சியை ஒரு நிறுவனம் அளித்தால், ஒருவரது திறமையின் மதிப்பை அந்நிறுவனம் உணர்ந்துள்ளது என்றும் அவர் மேலும் ஊழியரணியில் இணைய அந்நிறுவனம் பெரிதும் ஆதரவளிக்கும் என்றும் உறுதியாக இருக்கலாம்," என்றார் திருவாட்டி டோரி.
எதிர்பார்ப்புகளைக் குறைக்கலாம்
நீண்டகால வேலை இடைவெளி எடுத்துக்கொண்ட ஒருவர், மீண்டும் வேலைக்குத் திரும்பும்போது சம்பளத்தைக் குறைத்துக்கொள்ளலாம் என்று திருவாட்டி டியோ கூறினார்.
சிறிது கால இடைவெளிக்குப்பின் மீண்டும் வேலைக்குத் திரும்ப விரும்பும் ஒருவர், தமது மதிப்பை அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, நான்கு அல்லது ஆறு ஆண்டுகள் கழித்து வேலைக்குத் திரும்ப விரும்பும் ஒருவர், நேர்காணலின்போது தமது அனுபவம் மட்டுமின்றி, தமது திறமையையும் நிறுவனம் மதிப்பிடலாம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும் என்கிறார் திருவாட்டி டோரி.
"ஆகையால், கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதிலும் தமது நீண்டகாலத் திட்டத்திலும் நிறுவனத்தின் இலக்குகளுக்குத் தாம் எவ்வகையில் பொருத்தமாக இருப்போம் என்பதிலும் அச்சமின்றித் தொழில்நுட்ப மாற்றங்களைக் கையாள முடியும் திறனிலும் கவனம் செலுத்த வேண்டும்," என்றார் அவர்.