கி.ஜனார்த்தனன்
கட்டுமானத் துறையில் பாதுகாப்பு நிர்வாகியாகப் பணிபுரியும் குருசங்கர் சங்கரதாஸ், 42, கொவிட்-19 கிருமிப்பரவல் கடந்தாண்டு கடுமையாக இருந்தபோது, சிங்கப்பூரில் உள்ள வயதான பெற்றோரை புத்தாண்டுக்காக நேரில் சந்திக்க இயலவில்லை. காணொளி மூலம் உரையாடி திருப்தியடைந்து கொண்டனர்.
"கிருமிப்பரவல் குறித்த கவலையும் எங்களது பெற்றோரின் உடல்நலம் குறித்த அச்சமும் கடந்தாண்டு அதிகமாக இருந்தது என்றே சொல்லவேண்டும்," என்றார் குருசங்கர்.
இவ்வாண்டும் சித்திரைப் புத்தாண்டு எளிமையாக இருந்தாலும் தங்களது பெற்றோரை நேரில் சந்தித்து கொண்டாடப் போவதை எண்ணி குருசங்கரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.
இந்தக் குடும்பத்தினர் தற்போது ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் வசித்து வருகின்றனர். சித்திரைப் புத்தாண்டின் அதிகாலையில் எழுந்து நல்ல நேரத்தில் பொங்கலிட்டு வழிபடும் இந்தக் குடும்பத்தினர், பிறகு வேலை மற்றும் பள்ளிகளுக்குச் செல்வர். மாலை வீட்டில் மீண்டும் இறைவழிபாட்டுக்குப் பிறகு அருகிலுள்ள தமது மனைவியின் பெற்றோர் வீட்டுக்குச் செல்வர். அத்துடன் அக்கம் பக்கத்தில் வாழும் தெரிந்தவர்களைக் கண்டு புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு மகிழ்வர். புனித வெள்ளிக்கிழமை விடுமுறையின்போது குடும்பத்துடன் தன் பெற்றோரின் வீட்டுக்குச் செல்லப்போவதாக மகிழ்ச்சி பொங்க கூறினார் திரு குருசங்கர்.
புத்தாண்டுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் வீட்டைச் சுத்தம் செய்திருந்தார் குருசங்கரின் மனைவி திருமதி சுமதி, 42. நல்ல நேரப்படி பொங்கல் வைத்தபின் தாம் சமைத்த பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு அருகில் வசிக்கும் தம் பெற்றோர் வீட்டுக்கு குடும்பத்துடன் செல்லப்போவதாகவும் கடற்துறை தளவாட அதிகாரியாகப் பணியாற்றும் திருமதி சுமதி கூறினார்.
பலர் சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று கோயிலுக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தாலும் அந்நாளில் தமது வீட்டை கோயிலாக்க வேண்டும் என்றே இத்தம்பதியினர் விரும்புகின்றனர்.
வார நாளில் குடும்பத்தினருடன் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவதால் சிறு சிறு சிரமங்கள் ஏற்பட்டாலும் பாரம்பரியத்தைத் தொடரும் பல குடும்பங்களில் தமது குடும்பமும் ஒன்று என நினைக்கும்போது பெருமை அடைவதாகக் குறிப்பிட்டார். "எந்தக் கலாசாரமாக இருந்தாலும் புத்தாண்டின்போது வரும் ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பர். கொவிட்-19 நிலவரம் சீரடைந்து இனி வரும் பண்டிகைகளின்போது இந்நாட்டின் நிலை சீராக இருக்க நான் வேண்டுகிறேன்," குருசங்கர் மேலும் தெரிவித்தார்.