மாதங்கி இளங்கோவன்
இந்திய புத்தாண்டு விழா
வெவ்வேறு இந்திய சமூகங்கள் இம்மாதத்தில் தங்கள் புத்தாண்டைக் கொண்டாடுவதையொட்டி அவற்றை சிறப்பிக்கும் வண்ணம் நடந்த நிகழ்ச்சிதான் லிஷாவின் இந்திய புத்தாண்டு விழா.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் அலுவலகத்தின் அமைச்சரான இந்திராணி ராஜா கலந்துகொண்டார். சிங்கப்பூரிலிருக்கும் பதினாறு இந்திய சமூகங்களைப் பிரதிநிதித்து அதன் தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில விருந்தினர்களும் சென்ற வெள்ளிக்கிழமையன்று நிகழ்ச்சிக்கு வருகையளித்தனர்.
மலையாளம், தெலுங்கு, சிந்தி, பிரானாகான், பஞ்சாபி ஆகிய சமூகங்களைச் சேர்ந்த நடனமணிகள் மேடையில் தங்கள் திறமையையும் கலாசாரத்தையும் வெளிக்காட்டும் விதத்தில் நடனங்களை படைத்து வருகையாளர்களைப் பரவசப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் உள்ளூர்க் கலைஞர்களும் பாடல்களைப் பாடி நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர்.
சித்திரைக் கலை விழா
திருக்குறளையும் திருவள்ளுவரையும் கருப்பொருளாகக் கொண்டு சித்திரைப் புத்தாண்டை இவ்வாண்டு கொண்டாடுகின்றது லிஷா அமைப்பு. 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' போன்ற திரைப்பட பாடல்களைக் கொண்டு சில குறள்களின் பொருளையும் நீங்காச் சிறப்பையும் வெளிக்காட்டினர், உள்ளூர் கலைஞர்கள்.
"ஒன்ஃபேரர் விடுதி மேடையில் நடந்த இந்நிகழ்ச்சியில் இனிய பாடல்களுக்கு மெருகூட்டும் வகையில் நடனங்களும் இடம்பெற்றன.
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த இசைக்கவி ரமணன், ஒரு சில குறள்களைத் தேர்ந்தெடுத்து அவை எப்படி இன்றும் மக்களுக்குப் பொருந்துகின்றன என்பதை விளக்கினார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், "பல இன சமுதாயத்தில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு, தாய்மொழி நம் தனிப்பட்ட கலாசாரங்களுக்கு அடித்தளமாக அமைகின்றது. "நமது முன்னோர்களின் வாழ்க்கை, காலம் காலமாக மற்ற இனத்தவரோடு பின்னிப் பிணைந்திருந்ததால் அவர்களுடைய பண்பாடுகள், வழிமுறைகள் அனைத்தும் உன்னதமான சிங்கை தமிழர் நடைமுறைகளாக அமைந்துவிட்டன," என தம் உரையில் கூறினார். அதாவது, சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களுக்கென தனிப்பட்ட ஓர் அடையாளம் உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு லிஷா அமைப்பு நேரடி நிகழ்ச்சிகளை நடத்தியதில் பெருமிதம் கொண்டதோடு தொடர்ந்து தமிழர் அடையாளத்தை பேணிக்காப்பதில் முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் விவியன் கூறினார்.