மாதங்கி இளங்கோவன்
ஈராண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துவர்கள் முழு மனத்தோடு தடங்கலின்றி தங்கள் பிரார்த்தனைகளைப் பூர்த்திசெய்ய தேவாலயங்கள் தங்களது கதவுகளைத் திறந்து உள்ளன.
கொவிட்-19 சூழலில் நடப்பில் இருந்து வந்த பாதுகாப்பு இடைவெளி நடைமுறைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகளுக்கு இணங்கி தேவாலயங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை.
இயேசு கிறிஸ்து தம் மக்களுக்கு செய்த தியாகங்களுக்கும் சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்ததையும் நினைவுகூரும் நாள்தான் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகின்றது.
இந்நாளில் தேவாலயங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனை செய்வதோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அனுபவித்த துன்பங்களையும் இறப்பையும் நினைவுகூர கிறிஸ்துவர்கள் "லெந்து" காலத்தின்போது விரதம் இருப்பது வழக்கம்.
இன்று வெவ்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாட்டுக் கூட்டங்கள் இடம்பெறவிருக்கின்றன.
தேவாலயங்களுக்கு வரும் கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை வாயிலாக தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
பாவ மன்னிப்பு பெற அவர்கள் கடவுளை வழிபடுகின்றனர் என்று ஈசூன் கிறிஸ்துவ தேவாலயத்தின் குருவானவர் அருட்திரு இஸ்ரவேல் செல்வம், 48, கூறினார்.
"கொவிட்-19 சூழலால் தங்கள் பிரார்த்தனைகளை நேரடியாக மனமார்ந்து பூர்த்திசெய்ய முடியாத நிலையிலிருந்த பக்தர்களுக்கு இம்முறை புனித வெள்ளி புதியதொரு நம்பிக்கையளிக்கும் நாளாகத் திகழ்கிறது.
"ஒருமித்த சமூகமாக தேவாலயங்களில் வழிபடுவோருக்கு வாழ்க்கையில் எந்தவொரு சிக்கல் ஏற்பட்டாலும் தங்களுக்கு ஆதரவளிக்க தங்களைச் சுற்றி பலரும் உள்ளனர் என்று அவர்கள் மீண்டும் ஒன்றுகூடும் இந்நாள் நினைவுபடுத்துகிறது," என்றார் அருட்திரு இஸ்ரவேல்.
ஈசூன் கிறிஸ்துவ தேவாலயம், கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளைப் படிப்படியாகத் தளர்த்தி வந்தாலும் தேவாலய வளாகத்தில் கிருமி நாசினியைத் தொடர்ந்து தெளித்து சுகாதாரத்தைக் கட்டிக்காக்கிறது.
வழிபாட்டிற்கு வருபவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கினாலும், அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று உண்ண தேவாலய நிர்வாகத்தினர் ஊக்குவிக்கின்றனர்.
கிறிஸ்துவர்கள் இன்று தேவாலயங்களுக்குச் செல்ல முன்பதிவு செய்யத் தேவையில்லை.
அதுமட்டுமல்லாமல், இருக்கைகளில் அமரும்போது தங்களுக்கு இடையே ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்றத் தேவையில்லாததால் தேவாலய வளாகத்தில் இடப்பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படவும் அவசியமில்லை.
தேவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்பு தங்கள் கைப்பேசிகளில் சேஃப் என்ட்ரி பதிவைச் செய்தால் மட்டும் போதுமானது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையை நேரடியாக தேவாலயங்கள் கொண்டாடவிருப்பதைக் காணவும் கிறிஸ்துவர்கள் ஆர்வத்தோடு உள்ளனர்.
புனித வெள்ளிக்குப் பிறகு இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஈஸ்டர் ஞாயிறும் கிறிஸ்துவர்களுக்கு முக்கியமான நாளாக அமைகிறது.