அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி
தமிழ்மொழி மாத விழாவின் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 24ம் தேதி "இயற்கையும் தமிழர் வாழ்வும்" என்ற தலைப்பில் மெய்நிகர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இளம் தலைமுறையைச் சேர்ந்த செல்வி. சுப்ரஜா சரவணக்குமாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
சிங்கப்பூர் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் தலைவர் திரு. சௌந்தர ராஜன், தமிழரின் வாழ்வியலை ஆய்வு செய்தால் இயற்கை குறித்த தமிழ் அறிவு மரபு நம்மை வியப்படையச்செய்யும் என்பதைச் சுட்டிக்காட்டி, அதன் பொருட்டே இந்தத் தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது என விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை ஏற்று தொடக்கவுரை அளித்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பேராசிரியர் இராம. கதிரேசன், இயற்கையோடு இணைந்த தமிழர் நாகரிகம் பற்றி பேசினார்.
அத்துடன், எவ்வாறு தமிழர்கள் திருவிழாக்களை தங்களின் முதன்மைப் பயிரான நெல் வளர்ச்சியின் ஐந்து பருவங்களோடு ஒப்பிட்டு கொண்டாடினார்கள் என்பதை எடுத்துரைத்தார்.
விதைவிதைக்கும் பருவம், குருத்து விடும் பருவம், பூப்பூக்கும் பருவம், நெல்மணியாகும் பருவம், அறுவடைப் பருவம் ஆகிய ஐந்து பருவங்களுக்கும் எவ்வாறு ஆடிப்பெருக்கு முதல் அறுவடைத் திருநாள் வரை விழா எடுத்துக் கொண்டாடினார்கள் என்பதை அழகாக விளக்கிக்கூறினார்.
"இயற்கையும் தமிழர் வாழ்வும்" என்ற தலைப்பில் தங்களின் ஆய்வுப் படைப்பினை சமர்ப்பிக்க பள்ளி மாணவர்களுக்குப் போட்டி நடத்தப்பட்டது.
இந்தப் போட்டியில் 49 மாணவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில், உயர்நிலை 1, 2ஆம் பிரிவுக்கான முதல் பரிசை தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் மாணவி சுரேஷ் அனிகா, ஆசிரியை திருமதி சூடிக்கொடுத்தாள் கணேசன் வென்றனர்.
உயர்நிலை 3, 4ஆம் பிரிவுக்கான முதல் பரிசை ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தின் மாணவர் ஆறுமுகம் முகேஷ்குமார், ஆசிரியை திருமதி கல்யாணி நாராயணன் வென்றனர்.
தொடக்கக் கல்லூரி பிரிவுக்கான முதல் பரிசை தெமாசெக் தொடக்கக் கல்லூரியின் மாணவர் விஷால் அருண்குமார், ஆசிரியை திருமதி சூடிக்கொடுத்தாள் கணேசன் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் நிகழ்ச்சியில் தங்களது ஆய்வினைப் படைத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சிங்கை எழுத்தாளர், கவிஞர், மற்றும் இலக்கிய மேடைப்பேச்சாளர் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், தமிழர்கள் இயற்கையின் வனப்பிலும், பூப்பிலும், பொலிவிலும் ஈடுபட்டு மகிழ்வதோடு நின்றுவிடாமல், பயன்தரும் அந்த இயற்கையை எவ்வாறு தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார்கள் என்பதை விளக்கிக்கூறினார்.
முந்தைய ஆண்டு தமிழ் மொழி விழாக்களின் சுருக்கத் தொகுப்பை திரு. செல்வமுத்துக்குமரன் படைக்க, சங்கத்தின் செயலாளர் செல்வி சுவர்ணா நன்றியுரை நவில, நிகழ்ச்சியின் நெறியாளராக திருமதி ஷோபா அழகுத் தமிழில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்ல, நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத்தலைவராக செயல்பட்ட சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திரு. குமரேசன் நிகழ்ச்சியை செவ்வனே வழி நடத்திச் சென்றார்.
செய்தி: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம்