உலகின் தொன்மையான இரு செம்மொழிகளான சீனமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இடையே மொழிபெயர்ப்பு மூலம் பாலம் அமைப்பதில் ஆர்வமும் அனுபவமும் மிக்கவர், 'பயணிதரன்' என்றறியப்படும் திரு ஸ்ரீதரன் மதுசூதனன் (படம்).
மொழிபெயர்ப்பில் அவர் பெற்ற அனுபவங்களை ஆர்வமுள்ளோருடன் பகிர்ந்துகொள்ள ஏதுவாக, இரண்டு கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையமும் தேசிய நூலக வாரியமும் இதில் கைகோத்துள்ளன.
இம்மாதம் 7ஆம் தேதியும் 14ஆம் தேதியும் இணையம் வழியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
"சீனத்திலிருந்து தமிழுக்கு: மொழிபெயர்ப்புக் கலை அனுபவங்கள்" என்ற தலைப்பில் முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் மெய்நிகர்வழி உரையாற்றுவார் திரு ஸ்ரீதரன் மதுசூதனன்.
இரண்டு கலந்துரையாடல்களையும் வருகைதரு மூத்த ஆய்வாளரும் சிங்கப்பூர் எழுத்தாளருமான திரு சித்துராஜ் பொன்ராஜ் நெறியாளராக வழிநடத்துவார்.
இந்திய வெளியுறவு அமைச்சின் தலைமையகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றும் திரு ஸ்ரீதரன் மதுசூதனன், பெய்ஜிங், ஹாங்காங், தைப்பே போன்ற வட்டாரங்களுக்குச் சென்ற அனுபவம்கொண்டவர்.
சீனமொழியைக் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு சீன இலக்கியங்களைப் படித்து ரசித்துள்ளார்.
இதன்மூலம் பெற்ற அனுபவங்களின் துணையுடன் தனது புனைபெயரில் நான்கு தமிழ்ப் புத்தகங்களை எழுதியுள்ளார் திரு மதுசூதனன்.
இவற்றில், நோபெல் பரிசு பெற்ற திரு மோ யான் எழுதிய சீன நூலின் மொழிபெயர்ப்பான 'மாற்றம்' என்ற நூலும் அடங்கும்.
மொழிபெயர்ப்புக் களத்தின் பல சவால்களை எதிர்கொண்டு, 2016ஆம் ஆண்டு, 'ஸ்பேரோ லிட்டெரரி அவார்ட்' எனும் மொழிபெயர்ப்பிற்கான விருதைப் பெற்றார் திரு மதுசூதனன்.
'ஸூம்' செயலி வழி நடைபெறவிருக்கும் கலந்துரையாடலில் பங்குகொள்வதற்கான விவரங்கள்:
'ஸூம்' சந்திப்புக் குறியீடு: 986 0783 9621
கடவு எண்: 285063
'ஃபேஸ்புக்' வழி நிகழ்ச்சியை நேரடியாகக் காண விரும்புவோர் https://www.facebook.com/sgtamilorg/ எனும் இணைய முகவரியை நாடலாம்.
செய்தி: ஆ. விஷ்ணுவர்தினி