2,000 சிறுவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் இலக்கைக் கொண்டுள்ளது 'மேக் அ விஷ் ஃபவுண்டேஷன்'
மாதங்கி இளங்கோவன்
ரேஷ்வரனுக்கு கார்கள் என்றால் மிகுந்த பிரியம். என்றைக்காவது ஒரு நாள் 'ஃபெர்ராரி' அல்லது 'லம்போகினி' போன்ற கார்களை ஓட்ட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது.
தொடக்கப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ரேஷ்வரனுக்கு 2016-ஆம் ஆண்டில் திடீரென உடல்நலம் குன்றியது. மருத்துவர்கள் அவன் லூக்கிமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிவிட்டனர்.
அவன் தம் கல்வியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்த வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. ஆனால், ரேஷ்வரனும் அவனது தாயாரும் மனம் தளராமல் உடனடியாகவே மருத்துவமனையில் சிகிச்சைக்குச் செல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தனர்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் 'கீமோ தெரபி' சிகிச்சைக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவனுக்கு உதவியாக இருந்த சமூக மருத்துவ சேவகி எஸ்தர், 'மேக் அ விஷ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பைப் பற்றி எடுத்துக்கூறி ரேஷ்வரனின் ஆசைகளைப் பூர்த்தி செய்ய இவ்வமைப்புக்கு விண்ணப்பிக்க ஊக்குவித்தார்.
உயிரை அச்சுறுத்தும் நோய்வாய்ப்பட்ட சிறுவர்களின் ஆசைகளைப் பூர்த்திசெய்யும் நற்செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புதான் 'மேக் அ விஷ் ஃபவுண்டேஷன்'. சிறுவர்களின் சின்ன சின்ன ஆசைக் கனவுகளை நனவாக்கும் இந்த அமைப்பு, ரேஷ்வரனின் ஆசைகளையும் நனவாக்கும் என நம்பிய எஸ்தர், தம் அன்பை வெளிக்காட்டும் விதத்தில் 'மேக் அ விஷ் ஃபவுண்டேஷன்' அமைப்புக்கு ரேஷ்வரனின் விண்ணப்பத்தை அனுப்பினார்.
ரேஷ்வரனின் பத்தாவது பிறந்த நாளன்று 'மேக் அ விஷ் ஃபௌன்டேஷன்' அமைப்பிலிருந்து சில பணியாளர்கள், ஆச்சரியமூட்டும் வகையில் ரேஷ்வரனைத் தேடிவந்து அவரது ஆசைகளைப் பற்றி நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
தனது ஆசைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என குழப்பத்திலிருந்த ரேஷ்வரனுக்கு தம் தாயார், "உனக்கு கார்கள் என்றால் பிடிக்கும் அல்லவா? அதையொட்டி நல்லதொரு ஆசையைத் தேர்ந்தெடுக்கலாமே?" என ஞாபகப்படுத்தினார். அப்படி ஆரம்பித்ததுதான் ரேஷ்வரனின் 'மேக் அ விஷ்' பயணம்.
வாகனம் ஓட்டுவதற்கு ஏற்ற வயது இல்லாததால் கார் ஓட்ட அனுமதி கிடைப்பது சவாலாகத்தான் இருக்கும் என புரிந்துகொண்டனர், மேக் அ விஷ் ஃபவுண்டேஷன் அமைப்பினர்.
அப்படியென்றால் ரேஷ்வரனின் உற்சாகம் குறையாமல் எவ்வாறு அவனது ஆசையை நிறைவேற்றலாம் என்று திட்டமிட்டனர்.
ரேஷ்வரன் காரை ஓட்டவில்லை என்றாலும் லம்போகினி காரில் பயணம் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் அவன் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்தனர்.
ஒரு நாள் இந்த வாய்ப்பு அவன் வீட்டின் கதவையே தட்டியது, ரேஷ்வரன் அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் மெய்மறந்து போனார்.
ரேஷ்வரன் வீட்டின் அருகிலேயே லம்போகினி காரை ஓட்டி வந்து, ஓர் ஆடவர், ரேஷ்வரனை காரில் ஏற்றிக்கொண்டு சிலேத்தார் வட்டாரத்தை வலம் வந்தார். இதுபோன்ற காரில் பயணம் செய்வது அதுவே அவனுக்கு முதல் அனுபவமாக இருந்தது.
பின்பு 2018-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடந்தேறிய எஃப்-1 கார் பந்தயத்தைப் பார்க்க வாய்ப்பளித்தது, 'மேக் அ விஷ் ஃபவுண்டேஷன்'. வி,ஐ.பி-களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து போட்டியைப் பார்க்கும் வாய்ப்பு ரேஷ்வரனுக்குக் கிடைத்தது.
பிரபல எஃப்-1 விளையாட்டுப் போட்டியாளர்களான மேக்ஸ் வர்ஸ்தாப்பன், லுவிஸ் ஹேமில்டன் என பலரையும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பார்த்து மகிழ்வுற்ற ரேஷ்வரன், இந்த அனுபவத்தை தன் வாழ்நாள் முழுக்கவும் மறக்கவே முடியாது என நினைவுகூர்ந்தார்.
தாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் அனுபவங்களை அளித்த 'மேக் அ விஷ்' அமைப்பிற்கு ரேஷ்வரனும் அவனுடைய தாயாரும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
"நோயால் தவித்துக்கொண்டிருந்தாலும் எனக்கு வாழ்க்கையில் நம்பிக்கை தந்ததோடு மறக்கமுடியாத இனிமையான நினைவுகளையும் 'மேக் அ விஷ்' அமைப்பு தந்துள்ளது. என்னைப் போன்ற சிறுவர்கள் தயங்காமல் தங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்ய நான் நிச்சயம் ஊக்குவிப்பேன்," என்றார் ரேஷ்வரன். 'மேக் அ விஸ் சிங்கப்பூர்' அமைப்பு கடந்த இருபதாண்டுகளில் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த 1,700க்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது. இன்னும் அதிகமான குழந்தைகளுக்கு உதவும் வகையில், இந்த அமைப்பு தனது 20ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டி 2,000 குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற இலக்கு கொண்டுள்ளது.
ஆசைகளைப் பூர்த்தி செய்யும் உலகின் ஆகப்பெரிய அமைப்பாக திகழும் 'மேக் அ விஷ் ஃபவுண்டேஷன்', 'லெகோ குரூப்', கேகே மருத்துவமனை, 'எஸ்.ஐ.ஏ. கிரிஸ் ஃப்ளையர்', 'சீக்ரெட் லேப்' என மொத்தம் 84 அமைப்புகளின் உதவியோடு சுமார் 1,700 பிள்ளைகளின் ஆசைகளை நனவாக்கியுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 13 புதிய ஆதரவாளர்களையும் பெற்றுள்ளது.