ஆ. விஷ்ணு வர்தினி
கவிமணமும் இசைமணமும் வீசிய ஆர்க்கிட் பூங்காவில் தமிழ் மாணவர்களும் பார்வையாளர்களும் கலந்துகொண்டனர்.
கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மே 1ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 200 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்வைத் தொடங்கி வைத்த, வானொலி படைப்பாளர் திரு முகமது ரஃபியின் நெறியாள்கையில் நடந்தேறியது 'கவிமணமும் இசைமணமும்' பாடல் நிகழ்ச்சி.
'சூப்பர் சிங்கர்' புகழ் சூரியாவும், திருமதி அனுபமா முரளியும் பாட, பாடல்களின் பின்னணி, உள்ளர்த்தம், கவிநயம் குறித்து உரையாடினார் முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன்.
தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டி, கவிதை எழுதும் போட்டி, கவிதை மொழிபெயர்ப்புப் போட்டி ஆகியவை ஏப்ரல் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவற்றுக்கான பரிசளிப்பு விழா, மாணவர்களின் வெற்றிபெற்ற படைப்புகளுடன் இடம்பெற்றது. ஏறக்குறைய நூறு மாணவர்கள் கவிதை, கவிதை மொழிபெயர்ப்பு ஆகிய பயிலரங்குகளில் பங்கேற்று, இப்போட்டிகளில் கலந்துகொண்டனர். சங்ககால புலவர்கள், கவிஞர்கள் என அறுவரை மேடையில் தோன்ற வைத்தனர் ஏற்பாட்டாளர்கள்.
சிங்கப்பூரில் தமிழ்மொழிப் புழக்கத்தைப் பற்றியும், தமிழ்மொழி விழாவின் சிறப்புகளைப் பற்றியும் நகைச்சுவையாக எடுத்தியம்பியது ஆறு இளையர்கள் படைத்த 'ஆர்க்கிட் பூங்கா' கவிதை நாடகம்.
தமிழுக்குத் தொண்டு செய்தோரை அங்கீகரிக்கும் கணையாழி விருதினைப் பெற்றார் திரு சாமிக்கண்ணு.
2003ஆம் ஆண்டிலிருந்து இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
"புதுமைப் பாணியில் பல நிகழ்வுகளைத் தமிழ் மாணவர்கள் படைக்கின்றனர். மாறிவரும் மொழிச்சூழலுக்கேற்ப நாம் இளைய தலைமுறையினருக்கான நவீனமயமான முயற்சிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும்.
"தமிழில் நன்றாக படைக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்து தமிழ் மாணவர்களுக்குமான நிகழ்வுகளைப் படைக்க முயற்சி செய்வோம்," என்றார் அவர். இளங்கவிஞர் தங்கமுத்திரை விருது திரு இரா. அருள்ராஜுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரு மனோகரன், சமூக தலைவர்களும் அமைப்புகளும் இணைந்து கூட்டுமுயற்சியினால் தமிழ்மொழி விழாவினை வெற்றிகரமாக நடத்தியுள்ளதைச் சுட்டினார். சிங்கப்பூரில் ஒலிக்கும் தமிழ்மொழி உலகறிய வளர்ந்துள்ள நிலையிலும், மேன்மேலும் தமிழோடு இணையாத இளையர்களை, குடும்பங்களை ஈர்க்க முயற்சிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார்.