இன்றைய இணைய யுகத்தில் பேனா கொண்டு தாளில் காதல் கடிதம் வரைவது கிட்டத்தட்ட ஒழிந்தே போய்விட்டது.
இந்நிலையில், அந்தப் பழக்கத்திற்குப் புத்துயிர் ஊட்டி வருகிறது ஜப்பானின் மியாஸாக்கி நகரம். பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதை அடுத்து, அதனை ஊக்குவிக்கும் நோக்கில் காதல் கடிதம் எழுதும் திட்டத்தை மியாஸாக்கி நகராட்சி அறிமுகப் படுத்தியது.
கைப்பட காதல் கடிதம் எழுதி, தங்களுடைய வாழ்க்கைத்துணையைத் தேடும்படி அந்நகரம் அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்திற்கு ஒற்றையர்கள் இடையே பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.
இதனால் அத்திட்டத்தை மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்த அத்திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் முடிவுசெய்துள்ளனர்.
"ஒருவரது எழுத்தாற்றலை யாரும் பார்ப்பதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் தாம் நேசிப்பவரைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து, உண்மையுடனும் அக்கறையுடனும் ஒவ்வொரு சொல்லையும் எழுதுவோம் என்பதுதான் உண்மை. அதுதான் கடிதங்களை ஆற்றல் மிக்கதாக ஆக்குகிறது," என்று சொன்னார், அத்திட்டத்தை நடத்திவரும் உள்ளூர் ஆலோசனை நிறுவனத்தின் தலைவர் ரை மியாட்டா.