சமூக ஊடகங்களிடம் இருந்து ஒரு வாரம் விலகியிருந்தாலே போதும், ஒருவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் மேம்படும். அத்துடன், மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்றவை குறைந்து, மனநலம் மேம்படவும் உதவும்.
'இணைய உளவியலும் சமூக வலைப்பின்னலும்' என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பிரிட்டனின் பாத் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு, சமூக ஊடகங்களில் இருந்து ஒருவார காலத்திற்கு விலகியிருப்பது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆராய்ந்தது.
ஃபேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை அன்றாடம் பயன்படுத்தும் 18 முதல் 72 வயதிற்குட்பட்ட 154 பேர் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்கள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். முதல் பிரிவினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை ஒருவார காலத்திற்கு நிறுத்தும்படியும் இரண்டாம் பிரிவினர் வழக்கம்போல சமூக ஊடகங்களில் நேரம் செலவிடும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஆய்வின் தொடக்கத்தில், அவர்களின் மனப்பதற்றம், மனச்சோர்வு, நல்வாழ்வு ஆகியவை மதிப்பிடப்பட்டது. முதல் வாரத்தில் அவர்கள் 8 மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இரண்டாவது வாரத்தில், முதல் பிரிவினர் 21 நிமிடங்களும் இரண்டாம் பிரிவினர் ஏழு மணி நேரமும் சமூக ஊடகங்களில் உலவ அனுமதிக்கப்பட்டனர்.
"காலை எழுவதில் இருந்து, இரவு உறங்கும்வரை நம்மை அறியாமலே பல மணி நேரத்தைச் சமூக ஊடகங்களில் செலவிடுகிறோம். அதனால், ஒரு வாரத்திற்குச் சமூக ஊடகங்களில் இருந்து விலகியிருப்பது, மனநலத்தில் எத்தகைய பலன்களைத் தரும் என்பதை அறிய விரும்பினோம்," என்றார் பாத் பல்கலைக்கழகச் சுகாதாரத் துறையின் தலைமை ஆய்வாளர் டாக்டர் ஜெஃப் லாம்பர்ட்.
"ஆய்வின் முடிவில் பங்கேற்பாளர்களில் பலரது மனநிலை மேம்பட்டு இருந்ததையும் மனப்பதற்றம் குறைந்திருந்ததையும் கண்டறிந்தோம். இது, சமூக ஊடகங்களில் இருந்து சற்றே விலகியிருப்பதுகூட நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது," என்று அவர் சொன்னார்.
"சமூக ஊடகங்கள், வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதிலும் மற்றவர்களைத் தொடர்புகொள்ள பலருக்கும் அவை இன்றியமையாததாக விளங்குகின்றன என்பதிலும் ஐயத்திற்கு இடமில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் பல மணி நேரம் செலவிடுவது தம்மில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒருவர் நினைத்தால், அவற்றின் பயன்பாட்டைக் குறைப்பது நல்லது," என்றார் டாக்டர் ஜெஃப்.
அடுத்ததாக, சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருப்பது வெவ்வேறு வயதுப் பிரிவினரின் உடல்நலத்திலும் மனநலத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய அந்த ஆய்வாளர் குழு விரும்புகிறது.
கடந்த 15 ஆண்டுகளில், நாம் தொடர்புகொள்ளும் முறையில் சமூக ஊடகங்கள் பெரும் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.
பிரிட்டனில் 2011ஆம் ஆண்டில் 45 விழுக்காட்டுப் பெரியவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திய நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் அவ்விகிதம் 71 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.
அங்கு 16 முதல் 44 வயதுப் பிரிவினரில் 97 விழுக்காட்டினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.