சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் நடத்தும் கதைக்களம் நிகழ்ச்சி, சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு தேசிய நூலகத்தில் நடைபெற்றது. மாணவர் கண்ணோட்டம் அங்கத்தில் இராஃபிள்ஸ் கல்வி நிலைய மாணவர்கள், உள்ளூர் எழுத்தாளர்கள் இருவரின் சிறுகதைகளைப் பற்றி உரையாடினர்.
எழுத்தாளர் சே.வெ.சண்முகம் எழுதிய 'சிங்கப்பூர்க் குழந்தைகள்' என்ற சிறுகதை அக்காலத்தில் மக்கள், இன, மொழி, மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்ததை உணர்த்துவதாக மாணவர்கள் கூறினர். சிங்கப்பூரில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதை இந்தக் கதை பதிவுசெய்திருப்பதை சுட்டினர்.
எழுத்தாளர் இராம வயிரவனின் 'நகர மறுத்த மேசை' என்ற சிறுகதை பழைய பொருள்களை மறுபயனீடு செய்யும் சிந்தனையை விதைப்பதாகக் கூறிய மாணவர்கள் கதாசிரியரிடம் தங்கள் ஐயங்களுக்கு நேரில் விளக்கம் பெற்றனர்.
மாணவர் கண்ணோட்டம் அங்கத்தில் பங்குபெறும் மாணவர்கள் கதைகளைச் சிறப்பாகத் திறனாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், தொடர்ந்து பயிற்சி செய்து சிறந்த எழுத்தாளர்களாகவும் விமர்சகர்களாகவும் உருவாகவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் இந்த மாதப் போட்டிப் படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலுடன் வெற்றியாளர்களுக்குப் பரிசும் வழங்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறும் கதைக்களம் 100வது நிகழ்ச்சி என்பதால் பொதுப் பிரிவு பரிசுத்தொகை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. முதல் பரிசு $100, இரண்டாவது பரிசு $75, மூன்றாவது பரிசு $50 வழங்கப்படும்.