அரங்கில் சண்டையிட்ட நாள்களில், தான் யார் என்பதை உணர்ந்ததாகக் கூறுகிறார் ஜெய் முவே தாய் உடற்பயிற்சிக் கூடத்தின் நிறுவனரான திரு ஜெரமி ஜூட், 37.
முவே தாய் சண்டைக் கலையில் போட்டியாளர்கள் கைகால்களைப் பயன்படுத்தி சண்டையிடலாம். இக்கலை தாய்லாந்தில் தோன்றி அதன் தேசிய விளையாட்டாக விளங்குவதால் இதற்கு தாய்லாந்துக் குத்துச்சண்டை என்ற பெயரும் உண்டு.
2008ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குத் தனது 23ஆம் வயதில் கல்விப் பயணத்திற்காக இவர் சென்றார். அப்போது தனது வாழ்க்கைமுறை பிடிக்காமல் போனதால், வாழ்வில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.
அவ்வாண்டு 'தி கன்டெண்டெர் ஆசியா' என்ற முவே தாய் போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதைக் கண்ட ஜெரமிக்கு அந்தச்சண்டைக் கலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. நியூயார்க்கில் இவர் தங்கியிருந்த இடத்திலிருந்து 45 நிமிடத் தொலைவில் அமைந்திருந்த உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் வாரத்திற்கு மூன்று முறை முவே தாய் வகுப்புகள் நடத்தப்படுவதைத் தெரிந்துகொண்டு எவ்வித தயக்கமுமின்றி அவற்றில் சேர்ந்தார்.
வகுப்புகளில் பங்கெடுப்பதற்கு முன்பு அவை சுலபமாக இருக்குமென எண்ணிய இவர், அவற்றுக்குச் சென்ற பின்பு, அவை உடலளவிலும் மனதளவிலும் தன்னைப் பெரிதும் சோதித்ததாகக் கூறினார்.
ஆனால், இக்கலையைக் கற்று சண்டையில் ஈடுபட்டபோது இனம்புரியா ஆனந்ததை உணர்ந்ததால் இதில் சிறந்து விளங்கவேண்டும்என்ற வேட்கையும் மனதில் தோன்றியதாக ஜெரமி சொன்னார்.
அதனால், இவர் தனது பயிற்றுவிப்பாளர்களின் அறிவுரையைக் கேட்டு, இணையத்தில் முவே தாய் சார்ந்த காணொளிகளைப் பார்த்து ஓய்வு திங்களிலும் பயிற்சிகளில் ஈடுபட்டு திறன்களை வளர்த்துக்கொண்டார்.
கற்றல் பயணம் முடிந்து 2010ஆம் ஆண்டு சிங்கப்பூர் திரும்பிய ஜெரமி, முவே தாய் கலை மீது கொண்ட ஆர்வத்தால் தினமும் அதை பயிலத் தொடங்கிய பிறகு இவரது ஆற்றலையும் ஆர்வத்தையும் கவனித்த பயிற்றுவிப்பாளர்கள், தாய்லாந்துக்குச் சென்று பயிற்சிபெற ஊக்குவித்ததால் இக்கலையை நன்கு கற்க இவர் அங்கு சென்றார். தாய்லாந்தில் ஒரு நாளுக்கு மொத்தம் ஆறு மணி நேரம் பயிற்சிகளில் ஈடுபட்டதாகவும் அப்பயிற்சிகள் நிபுணத்துவம் வாய்ந்தவையாக இருந்ததென்றும் இவர் கூறினார். அங்கு பல புது உத்திகளையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதாகவும் ஜெரமி தெரிவித்தார்.
இவ்வாறு பயிற்சி பெற்று வந்த வேளையில், 2011ஆம் ஆண்டு முதல்முறையாக பாதுகாப்பு கவசம் ஏதுமின்றி சண்டையிடும் முவே தாய் போட்டி ஒன்றில் பங்கேற்று அதில் தோல்வியுற்ற நிலையிலும், அதன் வழி தனக்கான பாதையைக் கண்டறிந்ததாக ஜெரமி கூறினார். முவே தாய் சண்டைக்கலையை நன்கு கற்று, அதில் போட்டியிடவேண்டும் என்பதை இவர் தனது குறிக்கோளாகத் தேர்ந்தெடுத்தார்.
ஆனால், பயிற்சிகளுக்கான கட்டண செலவுகளைச் சமாளிக்க என்ன செய்வதென்ற கேள்வி எழுந்தபோது இவர் சுவாரசியமான தீர்வொன்றைக் கையிலெடுத்தார்.
சிங்கப்பூரில் ஒன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரை பணிபுரிந்து பணம் சேமித்து, ஏறக்குறைய ஆறு மாதங்கள் தாய்லாந்துக்குச் சென்று பயிற்சி பெறத் தொடங்கினார். இதை 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை செய்துவந்தார்.
அதனால் பல போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற ஜெரமிக்கு 2019ஆம் ஆண்டு கண்ணில் ஏற்பட்ட காயம் இவரின் முவே தாய் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வரும் என்பது அப்போது தெரியவில்லை.
அந்தக் காயம் மோசமான ஒன்றாக இருந்தபோதும் தனது மனம் தொடர்ந்து போட்டியிடுவதையே விரும்பியதாக இவர் கூறினார். ஆனால், மனம் விரும்பியதற்கு உடல் ஒத்துழைக்காததால் அவ்வாறு செய்ய முடியவில்லையென ஜெரமி கவலை தெரிவித்தார்.
மனதில் வருத்தம் நிறைந்திருந்தாலும், காயம் குணமாக காத்திருந்த காலத்தில், வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியதாக இவர் கூறினார். முவே தாய் கற்பதில் அதிக கவனம் செலுத்தியதால் பணம் சேமிப்பதில் இவர் கவனம் செலுத்தத் தவறிவிட்டார். அதனால், காயம் ஏற்பட்ட பிறகு சில ஆண்டுகள் பல்வேறு வேலைகளைச் செய்த ஜெரமியால் முழு மனதுடன் ஆனந்தமாக இருக்கமுடியவில்லை. முவே தாய் கலையைப் பயிலாதது மனதில் வெற்றிடம் ஒன்றை உருவாக்கியது போன்ற உணர்வு இவரிடம் இருந்தது.
இவ்வாறு சென்று கொண்டிருந்த வாழ்க்கையில், இவர் ஒரு முவே தாய் வீரர் என்பதை அறிந்த சில நண்பர்கள் தங்களுக்குக் கற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். தனக்குப் பிடித்த கலையைக் கற்றுத்தரும் வாய்ப்பு கிடைத்ததால் அதை மிகுந்த ஆனந்தத்துடன் ஜெரமி ஏற்றார். ஆரம்பத்தில் குறைந்தளவிலான மாணவர்களுடன் தொடங்கிய இவரது வகுப்புகள், சென்ற ஆண்டு முதல் பல மாணவர்களை ஈர்த்தன.
இதனால், இவர் ஜெய் முவே தாய் என்ற உடற்பயிற்சிக் கூடத்தை நிறுவி, கட்டுப்படியான கட்டணங்களில் முவே தாய் வகுப்புகளை நடத்தி வருகிறார். இவரது மாணவர்கள் முவே தாய் கலையில் தேர்ச்சி பெறுவதோடு அவர்கள் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பது மனதிற்கு நெகிழ்ச்சியளிப்பதாக ஜெரமி மகிழ்ச்சி தெரிவித்தார்.
"போட்டியிட முடியாமல் போனதால் ஏற்பட்ட வெற்றிடம், மற்றவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பதன் வழி நிறைந்துள்ளது" என்று ஜெரமி கூறினார்.
யுகேஷ் கண்ணன்