செயற்கை நுண்ணறிவால் மருத்துவத் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. உதாரணமாக சில வேளைகளில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களால் துல்லியமான முறையில் வேகமாக நோய்களைக் கண்டறிய முடிகிறது.
எனினும், செயற்கை நுண்ணறிவு முறைகளால் கொள்கை அடிப்படையிலான பிரச்சினைகள், சட்ட ரீதியான சவால்கள் ஆகியவையும் எழக்கூடும். அவற்றை சரிசெய்வது அவசியம்.
அதற்குப் பின்னரே மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு முறைகளைப் பரவலாகச் செயல்படுத்தமுடியும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் லீ கொங் சியான் மருத்துவப் பள்ளியின் தலைவரான பேராசிரியர் ஜோசஃப் சுங் கூறியுள்ளார். நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசியாத வகையில் அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு முறைகளும் கருவிகளும் தவறாக உபயோகிக்கப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது போன்றவை இதன் தொடர்பிலான பிரச்சினைகளில் அடங்கும்.
"தொழில்நுட்பத்தைச் சரியான முறையில் பயன்படுத்தத் தெரியாவிட்டால் நாம் மீறப்படுவதோடு மனித குலத்திற்கே பேரிடர் ஏற்படும்," என்று பேராசிரியர் சுங் குறிப்பிட்டார்.
மருத்துவம் உள்பட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் செயற்கை நுண்ணறிவு வகிக்கும் பங்கைப் பற்றி பேராசிரியர் சுங் தமது உரையில் சுட்டினார். சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோருடன் சுகாதாரப் பராமரிப்பு முறை, சமூகம் ஆகியவற்றிலும் செயற்கை நுண்ணறிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதைஅவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, நோய்களைக் கண்டறிவதற்கு உதவும் பல செயற்கை நுண்ணறிவு முறைகள் சிகிச்சை நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.
எனினும், தகவல் தரவு பாதுகாப்பு தொடர்பிலான அச்சம் இருந்து வருவதையும் பேராசிரியர் சுங் எடுத்துச்சொன்னார்.
"பெருங்கடலளவு தகவல் தரவு நம்மிடம் இருக்கிறது. ஆனால், தகவல்களைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான வழியும் அவ்வாறு செய்யமுடியும் என்ற நம்பிக்கையும் இல்லை," என்பதை அவர் தெரிவித்தார். மேலும், உயிர் தொடர்பிலான முடிவுகளைச் செயற்கை நுண்ணறிவு முறைகள் அல்லது இயந்திரங்களைக் கொண்டு எடுப்பது சரிதானா என்ற கேள்வி நோயாளிகளிடையே நிலவி வருகிறது.
மருத்துவத் துறையின் செயற்கை நுண்ணறிவு அம்சங்களையும் தானியக்க வாகனங்களையும் பேராசிரியர் சுங் ஒப்பிட்டுப் பேசினார்.
"இயந்திரங்கள் வாகனத்தை இயக்கும்போது ஓட்டும் பொறுப்பு படிப்படியாக ஓட்டுநரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
"இதை வைத்துப் பார்க்கும்போது சுகாதாரப் பராமரிப்பு முறைகள், அறுவை சிகிச்சை ஆகியவையும் அந்த திசையில் செல்லக்கூடும். மருத்துவர்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் முடிவெடுக்கலாம், இயந்திர மனிதர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம். இதன் தொடர்பில் பேச்சுவார்த்தை அதிகம் இடம்பெறும்," என்று பேராசிரியர் சுங் விவரித்தார்.
கிராண்ட் கோப்தோர்ன் வாட்டர்ஃபிரண்ட் ஹோட்டலில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'ஏஎம்எஸ்' எனும் சிங்கப்பூர் மருத்துவக் கழகத்தின் அறிமுக நிகழ்ச்சியில் அவர் பேசினார். 105 கல்விமான்கள் கழகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
நிகழ்ச்சியில் அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.