அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவை மட்டுமே உண்போருக்கு நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று முன்னர் பல ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது. ஆனால் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் சைவ உணவை உண்ணும் பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு 33 விழுக்காடு அதிகம் என்று தெரியவந்துள்ளது.
முன்னதாக 1995ஆம் ஆண்டுக்கும் 1998ஆம் ஆண்டுக்கும் இடையே, பிரிட்டனைச் சேர்ந்த 35 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடம் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை ஆகியவை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.
பின்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களில் யாருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது எனக் கண்காணிக்கப்பட்டது.
இதில் வாரத்துக்கு ஐந்து நாள்களுக்கு இறைச்சி உண்ணும் பெண்களுடன் ஒப்பிடுகையில் அசைவ உணவு உண்ணாத பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம் என்று கண்டறியப்பட்டது. மீன் மட்டும் உண்பவர்களுக்கும் எப்போதாவது இறைச்சி உண்பவர்களுக்கும் இத்தகைய அபாயம் ஏற்படாததும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
இதற்கான வழிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
சரியான உடல் எடையைக் கொண்டிருப்பது, புரதச் சத்து நிறைந்த உணவுகளையும் பால் பொருள்களையும் வைட்டமின் B-12 சத்து நிறைந்த உணவையும் போதிய அளவில் உண்பது, புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்ப்பது, எலும்புகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைச் செய்வது ஆகியவை அவை.