நல்ல தரமான தூக்கம் உள்ளவர்களுக்கு வாதநோய், இதயநோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. தூக்கம்தானே எனும் அலட்சியம் வேண்டாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நல்ல தூக்கம் குறைவதால் இதய நோயும் வாத நோயும் ஏற்படும் அபாயம் அதிகமாவதாக ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.
நல்ல தரமான தூக்கம் உள்ளவர்களுக்கு, மிக மோசமான தூக்கம் உள்ளவர்களைவிட இதய நோய் ஏற்படும் அபாயம் 75 விழுக்காடு குறைவு என்று ஓர் ஆய்வு கூறுகிறது.
ஐரோப்பிய இதயநோய் சிகிச்சை சங்கத்தின் மாநாட்டில் இந்த வாரம் தெரிவிக்கப்பட்ட ஆய்வு, எல்லாருக்கும் நல்ல தூக்கம் இருந்தால் பத்தில் ஏழு இதய நோய் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று கூறியது.
நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு இதய நோய் வரக்கூடும் என்று பல முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அவை, தூக்கத்தில் அதிகக் குறட்டை விடுவது, தூங்கும் நேரம் போன்ற ஓர் அம்சத்தை மட்டும் ஆராய்ந்தன. இந்த ஆய்வோ ஐந்து முக்கிய அம்சங்களை ஆராய்ந்தது.
பிரான்சின் தேசிய சுகாதார, மருத்துவ ஆய்வு நிலையத்தின் ஆய்வாளர்கள் அதை முன்னெடுத்தனர். கிட்டத்தட்ட 60 வயதுள்ள சுமார் 7,200 பேரின் தூக்கமும் உடல்நலமும் பத்தாண்டுகளுக்குக் கண்காணிக்கப்பட்டன. அவர்களின் தூக்கத்தின் தரத்தைக் குறிக்க பூஜ்ஜியம் மதிப்பெண்கள் முதல் ஐந்து மதிப்பெண்கள் வரை வழங்கப்பட்டன.
மோசமான தூக்கத்தைக் குறிக்கும் பூஜ்ஜியம் அல்லது ஒன்று எனும் மதிப்பெண் பெற்றவர்களைவிட மிக நல்ல தூக்கத்தைக் குறிக்கும் ஐந்து மதிப்பெண்களைப் பெற்றவர்களுக்கு, இதய நோய் அல்லது வாத நோய் ஏற்படும் அபாயம் 75 விழுக்காடு குறைந்தது.
ஒரு மதிப்பெண் கூடி தூக்கம் மேம்படும்போது வாத நோய், இதய நோய் ஏற்படும் அபாயம் ஏழு விழுக்காடு குறைந்தது என்றும் ஆய்வு தெரிவித்தது.
வயது ஏற ஏற, தூக்கம் தடைபடுவது அதிகரிக்கும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் நுஃபீல்டு மருத்துவம்சார் நரம்பியல் துறைப் பேராசிரியர் கோலின் எஸ்பீ கூறினார்.
"நம் உடலிலும் மூளையிலும் உயிர்வாயு குறைவதை இரவு உள்ளிட்ட எல்லா நேரங்களிலும் நாம் தவிர்க்க வேண்டும். சிலருக்குத் தூங்கும்போது மூச்சு சற்று நேரம் நின்றுவிடலாம் அல்லது ஸ்லீப் ஏப்னியா எனும் அளவுக்கு அதிகமான குறட்டை ஏற்படலாம். தூக்கத்தைக் கெடுக்கும் இவை மிகக் கடுமையானால், இதயநோய் ஏற்படும் அபாயம் அதிகம்," என்றார் பேராசிரியர் எஸ்பீ. மேலும், வாத நோய் ஏற்பட்டவர்கள் உடல் தேறுவதற்கு நல்ல தூக்கம் அவசியம் என்று அவர் கூறினார்.
தூக்கத்தில் மூன்று கட்டங்கள் உள்ளதாகவும் அவற்றில் ஆர்இஎம் எனப்படும் ஆழ் தூக்கத்தில்தான் உடலும் மூளையும் ஓய்வும் புதுத் தெம்பும் பெறும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர் மார்க் ஹெல்ஸர் குறிப்பிட்டார்.
தடைபடாத தொடர் தூக்கம்தான் நல்ல தூக்கம். அடிக்கடி விழித்துக்கொண்டால் தூக்கம் தடைபட்டு மீண்டும் அதன் மூன்று கட்டங்களும் முதலிலிருந்து தொடங்கும். இதனால் தூக்கப் பற்றாக்குறை ஏற்படும். மூளை தேவையான ஓய்வையும் புதுப்பித்தலையும் பெறாது என்றும் அவர் கூறினார்.
படுக்கையில் படம் அல்லது கைபேசியைப் பார்ப்பது, சரியில்லாத மெத்தை, அல்லது சூழல் போன்றவற்றால் தூக்கம் தடைபடலாம். இதனால் மூளை மெதுவாக செயல்படுவதுபோல உணர்வோம். உடலும் மனமும் சோர்வாக இருக்கும் என்றார் டாக்டர் ஹெல்ஸர்.
நல்ல தூக்கத்தைப் பெற ஒவ்வோர் இரவும் அதே நேரத்துக்குப் படுக்கச் செல்ல வேண்டும் என்றும் கைபேசிகளை தூங்கும் இடம் அருகே வைக்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அத்துடன் படுக்கை அறையை இருட்டாகவும் அமைதியாகவும் வைத்திருப்பது அவசியம்.