மாதங்கி இளங்கோவன்
பிள்ளைகளின் கற்றலுக்குத் தடையாக இருக்கும் குறைபாடுகளை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடித்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆசிரியர்களுள் ஒருவர் ஷக்தி மிஷெல், 32. தம் இளம் பருவத்திலிருந்தே பிள்ளைகள் மீது அதிக அன்பு கொண்ட இவருக்கு, அவர்களுடைய கற்றலிலும் வாழ்க்கையிலும் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற வேட்கை உண்டானது.
'ஏவா'வின் ஆரம்பகால இடையீட்டு நிலையத்தில் ஐந்து வருடங்களாக பணிபுரியும் ஷக்தி, மருத்துவமனைகளால் பரிந்துரைக்கப்பட்டு இந்நிலையத்துக்கு அனுப்பப்படும் பிள்ளைகளுக்கு உதவி வருகிறார். சில மாதங்களே ஆன குழந்தைகள் முதல் ஆறு வயது சிறுவர்களுக்கு இவர் ஆதரவு வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுடன் பலதரப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவர்களுக்கு அடிப்படைத் திறன்களைக் கற்றுத்தரும் ஷக்திக்கு, இப்பணியில் ஈடுபடுவது தமது மனதுக்கு திருப்தி அளிப்பதாக பகிர்ந்துகொண்டார்.
உதாரணமாக, பந்தைக் கையில் எடுத்துக்கொள்வது, பந்தை உதைப்பது, சிறு ஏணியில் ஏறுவது என ஒரு சில எளிதான செயல்களை எவ்வாறு செய்வது எனப் பிள்ளைகளுக்கு இவர் வழிகாட்டுவார்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்நிலையத்திற்கு முதன் முதலில் அனுப்பும்போது, அவர்களுக்குப் பதற்றமாக இருக்கும் என்று கூறிய ஷக்தி, அந்தப் பதற்ற நிலையைச் சமாளிப்பதற்காக பெற்றோருக்கென பயிலரங்குகள் நடத்துவதாகவும் கூறினார். பிள்ளைகள் வீட்டிலிருக்கும்போது அவர்களுடன் எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் அவர்களுடைய திறன்களை எவ்வாறு மேம்படுத்த உதவலாம் என்றும் பெற்றோருக்கு அவர் அறிவுறுத்துவார்.
"சிறப்புத் தேவையுடைய இந்தப் பிள்ளைகள் தங்களின் கற்றலில் முன்னேற்றம் காண, பெற்றோர் என்னென்ன வழிகளைக் கையாளலாம் என்று வழிகாட்டுவேன். நாளடைவில் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் தெரியும்போதெல்லாம் என் பணியின் உன்னதத்தை உணர்கிறேன்," என்றார் குழந்தை உளவியல் கல்வித் துறையில் பட்டயம் பெற்ற ஷக்தி.
ஷக்தி ஒவ்வொரு பிள்ளைக்கும் தனிப்பட்ட திட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு வழிகாட்டுவதில் பெருமைகொள்கிறார். பிள்ளைகளின் பெற்றோருடன் நல்ல தொடர்பு இருக்க வேண்டும் என்று நம்பும் இவர், தம் குழுவோடு சில சமயம் பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று பார்ப்பதும் உண்டு.
பேச்சுத்திறன், கேட்கும் திறன் இல்லாத பிள்ளைகளுடனும் அவர்களின் பெற்றோருடனும் சைகை மொழி மூலம் உரையாடுவதற்கு தான் அதைக் கற்று வருவதாக ஷக்தி குறிப்பிட்டார்.
இது அவருக்குச் சற்று சவாலாக இருந்தாலும் இதன்வழி மேலும் பல பிள்ளைகளுக்கு உதவ முடியும் என்று நம்புகிறார். கல்வியாளர்களுக்கு அர்ப்பணிப்பும் ஆர்வமும் இருக்கும்போது ஆசிரியர் துறைக்கு மேலும் சிறப்பு சேர்ப்பர் என்பதை ஷக்தி போன்றவர்கள்வழி உணர முடிகிறது.