காயத்திரி காந்தி
உயிரை மாய்த்துக்கொள்வதைத் தடுக்கும் நோக்கில் டெலிவரூ சிங்கப்பூர், 'எஸ்ஓஎஸ்' எனப்படும் சிங்கப்பூர் அபய ஆலோசனை மன்றத்துடன் (Samaritans of Singapore) இணைந்து புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
உயிர் மாய்ப்புத் தடுப்பு தினம் வரும் 10ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு டெலிவரூ சிங்கப்பூர், லாப நோக்கமற்ற எஸ்ஓஎஸ் அமைப்புடன் இணைந்து 30 விநியோக ஓட்டுநர்களுக்குப் பயிற்சிப் பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்தது.
முதலில் உடனடி உதவி வழங்குபவருக்கான பயிற்சியாக பயிலரங்கு அமைந்தது. உயிர் மாய்ப்புத் தடுப்பு தொடர்பான முக்கியத் திறன்களையும் தகவல்களையும் பெற்றுக்கொண்ட விநியோக ஓட்டுநர்கள், சமூகத்தில் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களுக்கு மேம்பட்ட ஆதரவை வழங்க வேண்டுமென அறிந்துகொண்டனர்.
கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடந்த பயிலரங்கில் எஸ்ஓஎஸ் பயிற்சியாளர்கள் 'பி எ செமேரிட்டன்' (பிஏஎஸ்) திட்டத்தை மேற்கொண்டனர்.
உயிரை மாய்த்துக்கொள்ளும் அபாயத்தில் உள்ளவர்களிடம் காணப்படும் எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண்பது, உயிர் மாய்ப்பு அபாயத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவு வழங்கும் வழிகள், ஆரம்பகட்டத்திலேயே உதவி நாடுவதற்கான வளங்கள் ஆகியவற்றைப் பற்றி டெலிவரூ ஓட்டுநர்கள் அறிந்துகொண்டனர்.
பயிற்சியில் கலந்துகொண்ட விநியோக ஓட்டுநர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்துடன் துயரத்தில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவு நல்கும் நம்பிக்கையையும் பெற்றனர். இதற்கிடையே, மேலும் சில டெலிவரூ ஊழியர்கள், இம்மாதம் பயிற்சி பெறுவதாகக் கூறப்பட்டது. உலகெங்கும் மனநலம் தொடர்பான ஒரு பெரும் பிரச்சினையாக உயிர் மாய்த்துக்கொள்ளும் போக்கு உருவெடுத்துள்ளது.
பிஏஎஸ் திட்டத்துடன் 200க்கும் மேற்பட்ட விநியோக ஓட்டுநர்கள் இம்மாதம் முழுவதும் உயிர் மாய்ப்பு தடுப்பு விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளைத் தங்களின் விநியோகப் பைகளின் மீது ஒட்டுவார்கள்.
"உயிர் மாய்ப்பு விவகாரம் இன்னமும் அதிகம் பேசப்படாத, களங்கத்துடன் தொடர்புடைய ஒன்றாக உள்ளது. இதை உடைத்தெறிய உயிர் மாய்ப்புத் தடுப்பு தொடர்பான உரையாடல்களும் புரிந்துணர்வும் தேவைப்படுகிறது," என்றார் எஸ்ஓஎஸ் அமைப்பின் தலைமை நிர்வாகி கேஸ்பர் டான்.
விநியோகச் சேவையின் மையமாக இயங்கி வரும் விநியோக ஊழியர்கள் அடிக்கடி சமூகத்தினரைச் சந்திப்பதால் உயிர் மாய்ப்புத் தடுப்பு தொடர்பான திறன்களை அவர்கள் பெற்றிருப்பது மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.