பாலஸ்டியர் சாலைக்கு இப்போது சென்றால், வண்ணமயமான கடைவீடுகளும், அண்ணாந்து பார்க்கவைக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் வரிசைகட்டி நிற்பதைப் பார்க்கலாம்.
ஆனால் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தப் பகுதியில் வேறு விதமான வீடுகள் ஆங்காங்கே காணப்பட்டன. மேல்தட்டு மக்கள் வசிப்பதற்குரிய பத்துக்கும் மேற்பட்ட பெரிய வீடுகள் இந்தப் பகுதியை அலங்கரித்தன. சிங்கப்பூர் ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகே நகர்ப்புறத்தில் பணியாற்றியவர்கள் அல்லது வர்த்தகர்கள் இங்கு வசித்தனர்.
ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் போட்லியன் நூலகத்தின் சேகரிப்பில் உள்ள தொகுப்பில் காணப்படும் பழைய வரைபடம் ஒன்று இதைக் காட்டுகிறது. 1900களில் சிங்கப்பூரும் தென்கிழக்காசியாவின் மற்ற பகுதிகளும் எப்படி இருந்தன என்பதைக் காட்டும் ஏறக்குறைய 1,500 அரிய வரைபடங்களை இந்த நூலகம் சேகரித்து வைத்துள்ளது.
அவற்றை மின்னிலக்க வடிவில் மாற்றி, புதிய இணையத்தளம் ஒன்றில் யார் வேண்டுமானாலும் இலவசமாகப் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்துள்ளனர், 'யேல்-என்யுஎஸ்' கல்லூரியைச் சேர்ந்த ஆய்வுக் குழுவினர். இந்த வரைபடங்கள் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின் போட்லியன் நூலகம் மட்டுமன்றி, சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம், லெய்டன் பல்கலைக்கழக நூலகங்கள், யேல் பல்கலைக்கழகத்தின் அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகளுக்கான நூலகம் ஆகியவற்றில் இருந்து, யேல்-என்யுஎஸ் கல்லூரியின் புதிய இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
புவியியல், வரலாற்றுத் துறைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விமான்கள், ஆர்வலர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய இந்த இணையத்தளம் சென்ற மாதம் 30ஆம் தேதி செயல்படத் தொடங்கியது.