மாதங்கி இளங்கோவன்
நிரஞ்சன் பாண்டியன் ஐந்து வயதாக இருந்தபோது, அவரின் தந்தை இந்தியாவில் நடந்த விபத்து ஒன்றில் தமது வலது கையை இழந்துவிட்டார். அந்த இழப்பினால் தந்தையின் அன்றாட வாழ்க்கைமுறையே மாறிப்போனது. சுயமாகச் சில செயல்களைச் செய்யும் ஆற்றலை அவர் இழந்தார். இசைக்கருவிகளை அவரால் வாசிக்க முடியாமலும் போனது.
தமக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலை தம் பிள்ளைகளைப் பாதித்துவிடக்கூடாது என்று எண்ணிய அந்தத் தந்தை, பிள்ளைகள் வாழ்வில் ஓர் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என லட்சியம் கொண்டார். வீட்டில் உள்ளவர்கள் இசைக் கலைஞர்களாக இல்லாவிட்டாலும் இசை சூழ்ந்தபடியே அவர்கள் வாழ்ந்ததால், நிரஞ்சனுக்குச் சிறு வயதிலிருந்தே இசை மீது மோகம் வளர்ந்தது.
அவரின் தந்தைதான் அவரை 'பாஸ்கர்ஸ் கலைக் கழகத்தில் புல்லாங்குழல் வகுப்புகளுக்கு அனுப்பினார். அவ்வாறே இசை அவருடைய வாழ்வில் பின்னிப் பிணையத் தொடங்கியது.
தன் குருவான கானவிநோதன் ரத்தினம்வழி புல்லாங்குழலின் மகிமையை அவர் உணர்ந்தார்.
மற்ற இசைக்கருவிகளுக்கு அழகு சேர்க்கும் சக்திவாய்ந்த இசைக்கருவி, புல்லாங்குழல் எனக் கற்றுக்கொண்டார், நிரஞ்சன். அதுமட்டுமல்லாமல், கானவிநோதன் இசைக் கலைஞர்களுடனும் மக்களுடனும் நல்லுறவு வைத்திருப்பதைக் கண்டு வியந்த நிரஞ்சன், அவ்வாறு பிறருடன் வலுவான உறவை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் கற்றுக்கொண்டார்.
தேசிய கலைகள் மன்றத்தின் உபகாரச் சம்பளத்தை 2019ஆம் ஆண்டில் பெற்ற நிரஞ்சன், அண்மையில் லசால் பள்ளியில் ஜெஸ் இசையில் தன் பட்டப்படிப்பை முடித்திருந்தார். கர்நாடக இசையில் மட்டும் திறன்வாய்ந்த கலைஞராக மற்றவர்கள் தன்னைப் பார்க்காமல், பலவிதமான இசை வகைகளை அழகாகக் கலவை செய்யும் கலைஞராகப் பார்க்க வேண்டுமென விரும்புகிறார்.
மேற்கத்திய புல்லாங்குழலையும் இந்திய புல்லாங்குழலையும் எவ்வாறு வாசிப்பது எனக் கற்றுக்கொண்ட நிரஞ்சன், இந்திய இசையுடன் 'இண்டோ-ஜெஸ்' இசையைக் கலந்து பல்வேறு பாடல்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் இசையமைத்துள்ளார்.
நிரஞ்சனின் இசைப் பயணத்தில் பல சவால்கள் இருந்தாலும் சாதிக்க முடியும் என்று அவர் தனக்குத்தானே கூறிக்கொள்வார். தன் இளம் பருவத்தில் அவருடைய அடையாளம் என்னவென்று அறியாமல் இருந்த நிரஞ்சனுக்கு, இசைவழி கதைசொல்வது சிறந்தவொரு அடையாளமாகிவிட்டது என்றார்.
"ஒரு செய்தியாளர் எவ்வாறு ஒரு நிகழ்வைக் கோர்வையாகக் கோர்த்து அதைச் சுவாரசியமாக எழுதுகிறாரோ அதைப்போல என்னுடைய இசைப் படைப்புகளின்வழி மனிதர்களின் கதைகளை மக்கள் உள்ளத்தைத் தொடும்விதமாகக் கூற விரும்புகிறேன்," என்றார் 29 வயது நிரஞ்சன்.
'பிரம்மாஸ்திரா' இசைக்குழுவை ஆரம்பித்த நிரஞ்சன் பாண்டியன், பல்வேறு இசை விழாக்களில் கலந்துகொண்டதுடன் தன் குழுவினருடன் இளையர்களின் ரசனையைத் தூண்டும் பல படைப்புகளையும் வழங்கியுள்ளார்.
உள்ளூர்ப் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் வருபவர்களோடு இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறார் இவர். அவ்விதத்தில் அவர் அஜீஸ் அசோக், ஹரிசரண் போன்ற பாடகர்களுடன் இணையம்வழியும் கைத்தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு, இசையமைத்து, சில இதமான பாடல்களை வழங்கியுள்ளார்.
'எனது தமிழே', 'சுட்டும் விழி', 'என்னை இழந்தேன்' ஆகியவை அவர் இசையமைத்த சில புகழ்பெற்ற பாடல்களாகும். இவையனைத்தும் உட்பட இந்திய விருது விழாக்களிலும் 'டர்ஹாம்' போன்ற மற்ற வெளிநாட்டு, அனைத்துலக இசை விருது விழாக்களிலும் விருதுகள், நியமனங்கள், கௌரவ அறிவிப்புகளையும் பெற்றுள்ளார்.