அனுஷா செல்வமணி
இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 30ஆம் தேதிவரை ஒரு மாதத்திற்கு நடக்கவிருக்கும் 'ஓவியமும் கவிதையும்' எனும் கண்காட்சி, ஓவியக்கலையையும் கவிதையையும் இணைக்கிறது. இதில் உள்ளூர் ஓவியக் கலைஞர் எம்ஜி குமாரின் எண்ணெய் ஓவியங்கள் இடம்பெறுகின்றன.
எஸ்தலேட்டிக் நுண்கலைக் கூடம், சிங்கப்பூர் கவிதை விழா, சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் எழுத்தாளர் அமைப்பு ஆகியவற்றின் பங்காளித்துவத்தோடு, சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஆதரவோடு நடக்கவிருக்கும் கண்காட்சியை தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ இம்மாதம் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கிறார்.
'ஏ ஜெர்ணி டௌன் தி ரிவர்' எனும் கருப்பொருளில் இந்தக் கண்காட்சி, பார்வையாளர்களை சிங்கப்பூர் வரலாற்றில் பின்னோக்கி கொண்டுசெல்லும். சிங்கப்பூர் ஆற்றை ஒட்டிய கதைகளையும் அக்காலத்தில் சிங்கப்பூருக்கு குடியேறியவர்கள் ஏற்படுத்திய தாக்கமும் நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பும் சிங்கப்பூரை எவ்வாறு உருமாற்றி உள்ளது என்பதை முன்வைக்கும் வகையில் கண்காட்சி அமையும்.
சிங்கப்பூர் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான கிளார்க் கீ, சைனாடவுன் போன்ற இடங்களை நினைவூட்டும் வண்ணத்தில் சித்திரங்களும் கவிதைகளும் கண்காட்சியில் முக்கிய அம்சங்களாக இடம்பெறவுள்ளன.
ஓவியங்களுக்கு அப்பாற்பட்டு, இலவச புத்தகங்கள், பிரபல கவிஞர்களின் படைப்புகள், மனித நூலகம், கலைஞர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் ஆகியவற்றை பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம். தேசிய நூலகக் கட்டடத்தின் ஒன்பதாவது தளத்தில் நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.