இன்று தொடங்கும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் விருதுபெற்ற எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், குற்றப்புனைவு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழகத்தைச் சேர்ந்த கவிஞரும் பாடகருமான இசைக்கவி இரமணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இலக்கிய கலாசார விருது பெற்ற படைப்புகளைக் கொண்டாடும் வகையில், 'தி ஆர்ட்ஸ் ஹவுஸ்' கட்டடத்தின் முதல் தளத்தில் இம்மாதம் 13ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிவரை இராம கண்ணபிரான் சார்பில் சித்ரா ரமேஷ் வாசிக்க உள்ளார். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
'வாசகர் வட்டம்' ஏற்பாட்டில் இம்மாதம் 13ஆம் தேதியன்று பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணிவரை ஆசிய நாகரிக அரும்பொருளகத்தின் 'டிஸ்கவரி' அறையில் 'வெகு ஜன இலக்கியமும் தீவிர இலக்கியமும்: இடைவெளிகளை இணைக்கும் பாலங்கள்' என்ற குழு அமர்வு இடம்பெறும்.
நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் சுனில் கிருஷ்ணன் பேசவுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் $30 கட்டணத்தில் விழா நுழைவு அனுமதியைப் பெறவேண்டும்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் மூன்று நிகழ்ச்சிகளைப் படைக்கவுள்ளது.
குற்றவியல் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் நடத்தும் குற்றவியல் கதை எழுதும் பயிலரங்கு, இம்மாதம் 12ஆம் தேதியன்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும். இரண்டாவது நிகழ்வு பட்டுக்கோட்டை பிரபாகருடன் ஒரு நேர்காணல் ஆகும். 'புதியன கற்றுணர்' என்ற இந்த நிகழ்ச்சி, 13ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 12.30 வரை இடம்பெறும். இரு நிகழ்வுகளும் விழா அனுமதியுடன் ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடைபெறும்.
எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவையும் இவ்வாண்டு எழுத்தாளர் விழாவுடன் இணைந்து நடத்தவிருக்கிறது. கவியரசு கண்ணதாசன் விழாவில் இசைக்கவி இரமணன் 'கவியரசின் பாடல்களில் இலக்கிய நயம்' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இந்த நிகழ்வு தேசிய நூலகக் கட்டடத்தின் நாடக நிலையத்தில் இம்மாதம் 19ஆம் தேதியன்று மாலை 5.30 மணி முதல் 9 மணி வரை நடைபெறவிருக்கிறது.
கவியரசு கண்ணதாசன் விழாவுக்கு அனுமதி இலவசம். இருப்பினும் அரங்குக்குள் செல்ல, கட்டணமில்லா நுழைவுச்சீட்டுகள் தேவை. அவற்றை விழா அன்று தேசிய நூலகக் கட்டடத்தின் மூன்றாவது மாடியில் அரங்கத்தின் நுழைவாயிலில் பெறலாம்.
கதைக்களத்தில் மாத்தளை சோமு
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திரக் கதைக்களத்தில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் திரு மாத்தளை சோமு 'எழுத்தும் சிந்தனையும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். கதைக்களம் நாளை மாலை 5.30 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் முதல் தளத்தில் 'விபிஆர்' அறையில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் திரு சிவக்குமார் கே.பி.யின் 'கொஞ்சம் காபி...கொஞ்சம் கதைகள்...' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் அறிமுகமும் இடம்பெறவிருக்கிறது.