அபுதாபி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்ஜென்டினா அணியில் மாற்றங்கள் இடம்பெறலாம் என்று அதன் பயிற்றுவிப்பாளர் லயனல் ஸ்கலோனி தெரிவித்துள்ளார்.
நட்புமுறை ஆட்டத்தில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளை 5-0 எனும் கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றி கண்ட பிறகு ஸ்கலோனி அவ்வாறு சொன்னார். அணியின் சில விளையாட்டாளர்கள் காயமுற்றிருப்பது அதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்காப்பு ஆட்டக்காரர் கிறிஸ்டியன் ரொமேரோ, தாக்குதல் ஆட்டக்காரர்கள் நிக்கலஸ் கோன்ஸாலஸ், அலெஹாண்டிரோ கோமெஸ், பாவ்லோ டைபாலா ஆகியோர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர்கள் சற்று காயமுற்றிருந்ததாக ஸ்கலோனி தெரிவித்தார்.
"எங்களுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. முடிவாக எந்த விளையாட்டாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் சில நாள்கள் உள்ளன. அணியில் மாற்றங்கள் இடம்பெறலாம். மாற்றம் தேவைப்படாது என்பது எங்களின் நம்பிக்கை. ஆனால் அதற்கான வாய்ப்பு உள்ளது," என்று ஸ்கலோனி செய்தியாளர்களிடம் சொன்னார்.
உலகக் காற்பந்தில் தலைசிறந்த நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படும் அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸி, உலகக் கிண்ணத்தை வெல்லும் கடைசி முயற்சியில் இறங்கவுள்ளார்.
அர்ஜென்டினாவின் பரம வைரிகளான பிரேசிலிலும் சில விளையாட்டாளர்கள் காயமுற்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவியது. புருனோ குய்மாரெஷ், அலெக்ஸ் டெலெஸ் ஆகியோர் பயிற்சிகளின்போது சற்று காயமுற்றனர். எனினும், டெலெஸ் பயிற்சி முடியும் வரை அதில் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. எல்லா
அதே வேளையில், எல்லா ஆட்டங்களிலும் தன்னால் ஆட்டங்களிலும் விளையாடமுடியுமா என்பது சந்தேகத்துக்குரியது என்று காயமடைந்த பிறகு குணமடைந்துவரும் தென்கொரிய நட்சத்திரம் சொன் ஹியோங் மின் கூறியுள்ளார்.
இதற்கிடையே, மான்செஸ்டர் யுனைடெட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சையில் சிக்கியிருப்பது தனது அணியின் கவனத்தைப் பாதிக்காது என்று போர்ச்சுகல் பயிற்றுவிப்பாளர் ஃபெர்னாண்டோ சான்டோ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.