குடியிருப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட அடுக்குமாடி வீட்டுக் கீழ்த்தள நூலகம்
ஒரு சமூகமாக ஒருவருக்கு ஒருவர் உதவும் கம்பத்து மனப்பான்மை சிங்கப்பூரில் குறைந்துகொண்டே செல்கிறது. இந்நிலையில் சமூக ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் வகையில் புளோக் 2 ஹாலண்ட் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி கீழ்த் தளத்தில் ‘ஹ்வி லிட்டில் நூலகம்’ என்ற நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஒரே ஒரு நூல் பேழையுடன் ஆரம்பித்த இந்த நூலகம், இப்போது பல மொழிகளில் பல வகையான நூல்களைக் கொண்டுள்ளது.
அடுக்குமாடி கீழ்த் தளம் வெறிச்சோடிக்கிடந்த நிலையைக் கண்ட 67 வயது திருமதி வாங் கை சீ, தன் அண்டை வீட்டுக்காரர்களுடன் சேர்ந்து இந்த நூலகத்தைத் தொடங்கியுள்ளார்.
சிறு வயதிலே சிங்கப்பூருக்கு வந்த அவர், ஆங்கிலம் தெரியாமல் மிகவும் சிரமப்பட்டார்.
நூலகத்தில் நேரம் செலவழித்ததால்தான் தனது மொழிவளம் மேம்பட்டது என்பதைப் பகிர்ந்துகொண்டார்.
ஆகையால், மற்றவர்களுக்கு எளிதில் எட்டும் வகையில் வீட்டிற்குக் கீழேயே நூலகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இவர் உள்ளத்தில் துளிர்விட்டது.
குழந்தைகள், முதியவர்கள் என்று பாகுபாடின்றி எல்லோரும் இந்த வசதிகளைப் பயன்படுத்தலாம்.
அண்மையில், இசைக்கருவிகளும் இந்த நூலகத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டன. மாணவர்கள் படிக்க, அங்கு மேசைகளும், சொகுசு நாற்காலிகளும் போடப்பட்டன.
ஹ்வி நூலகத்தில் உள்ள எல்லா வசதிகளும் நூல்களும் பலரால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. 24 மணி நேரமும் திறந்திருக்கும் இந்த நூலகம் ஒரு சிறிய உணவு தயாரிக்கும் அறையையும் கழிவறையையும் கொண்டுள்ளது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அங்கு இருக்கும் இலவச உணவுப் பொருள்களைச் சாப்பிடலாம்.
இந்த நூலகத்தை ஆரம்பிக்கும் கனவை நிஜமாக்கியது மக்களின் ஆதரவும் அன்பும் என்று பெருமையுடன் கூறினார் முன்னாள் இசைக்கலைஞர் திருமதி வாங்.
“கேட்காமலே இந்தப் பொருள்கள் நம்மை வந்து அடையும்போது இந்த கம்பத்து உணர்வு சிங்கப்பூரில் இன்னும் உள்ளது என்று நினைத்து மகிழ்கிறேன்,” என்று கூறினார் திருமதி வாங்.
இந்த நூலகத்தை ஆரம்பிக்க அங்கு இருந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அரசாங்கம், குடியிருப்புக் குழுக்களின் ஆதரவு இல்லாமல் இந்த வசதியை ஏற்படுத்த முடியாது என்று அவர்கள் நினைத்து மனம் தளரவில்லை. அவர்களுக்குத் தெரிந்தவர்களை நாடி இந்தத் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினர்.
இத்துடன், மழை வரும் நேரத்தில் நீர் பெருகி நூல்களை சேதப்படுத்துவதை நினைத்து வருந்துகிறார் அங்கு வசிக்கும் திருமதி ஜாய்ஸ். இதை தவிர்க்க திரைச் சீலைகள் பொருத்த அவர்கள் ஒன்றுசேர்ந்து நிதி திரட்டினர். அடுத்த ஆண்டு இன்னும் வசதிகளை மேம்படுத்த நிதி திரட்ட ஆரம்பிப்பார்கள்.
அங்கு வசிக்கும் முதியோர்கள் செய்தித்தாள்கள், நூல்கள் படித்து மகிழலாம்.
நான்கு சுவர்களுக்குள் வீட்டிலேயே அடைந்துகிடக்கத் தேவையில்லை என்றார் அங்கு வசிக்கும் திரு முஹம்மத். இதில், தாத்தா பாட்டிகள் தங்களின் பேரப்பிள்ளைகளுடன் நூல்களைப் படித்து விளையாட்டுகளை விளையாடவும் ஓர் இடம் அமைக்கப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்கிறார் இரண்டு பேரப்பிள்ளைகளுக்கான பாட்டி திருமதி லத்திஃபா.
அண்டை வீட்டுக்காரர் யார் என்று தெரியாத திரு கிரன், இந்த நூலகம் மூலம் அவரும் அவரின் குடும்பத்தாரும் இப்போது பல நண்பர்களைப் பெற்றுள்ளனர்.
நம்மைச் சுற்றி அழகு இருந்தால்தான் நம் வாழ்க்கையும் அழகாக காட்சியளிக்கும் என்று நம்புகிறார் திருமதி வாங். அதனால் இந்த நூலகத்தை அவர்கள் மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் பராமரித்து வருகிறார்கள்.
விழாக் காலங்களில் விழாக்களுக்கு ஏற்ப அவ்விடம் அலங்கரிக்கப்படும். அவ்வாறு அலங்கரிக்கப்படும் பொருள்கள் யாவும் மக்களால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டவை.
மக்களின் அன்புக்குத் தடை இல்லை என்ற அவர், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை சொல்லிக் கொடுக்கவும் சிலர் முன்வந்துள்ளனர்.
அங்கு வசிப்பவர்கள் மட்டுமல்லாமல் மற்ற குடியிருப்புப் பேட்டைகளில் வாழ்பவர்களும் இங்கு வந்து நூல்களைப் படிப்பதோடு பியானோவையும் வாசித்து மகிழ்கிறார்கள்.
நேரம் கிடைக்கும்போது பங்ளாதேஷ் வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு வந்து பொழுதைக் கழிப்பர்.
புத்தாண்டுக் காலத்தில் ஹாலண்டில் புளோக் 2 இல் வசிப்பவர்கள் வெளிநாட்டு ஊழியர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விருந்தளித்து மகிழ்வர்.
மேலும் பல குடியிருப்புப் பேட்டைகளில் இதுபோன்ற நூலகத்தை உருவாக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் விரும்புகிறார்கள். அங்குள்ளவர்கள் சலிப்புத் தட்டாமல் முகத்தில் புன்னகையோடு இருக்க இந்த நூலகம் ஒரு பெரிய பங்கை ஆற்றியுள்ளது. கம்பம் மனப்பான்மை நம் தாத்தா பாட்டி காலத்துடன் முடிந்துபோய்விடக் கூடாது என்ற குறிக்கோளுடன் திருவாட்டி வாங்கும் அவரின் அண்டை வீட்டுக்காரர்களும் இருக்கிறார்கள்.
ரச்சனா வேலாயுதம்