அனுஷா செல்வமணி
வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், நாம் தொழில்நுட்பத்தையே அதிகம் சார்ந்துள்ளோம். அத்துடன் கொரோனா நெருக்கடி நம் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில், வீட்டில் இருந்தவாறு வேலை செய்வது, கல்வி கற்பது, இணையம் வழி பொருள்களை வாங்குவது என மின்னணுச் சாதனங்களின் பயன்பாடு பெரும் அளவு அதிகரித்துள்ளது. இதுபோன்ற அத்தியாவசிய பயன்பாடுகளை நம்மால் தவிர்க்க முடியாது.
ஆனால், சாலையில் நடக்கும்போதும் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்யும்போதும் திறன்பேசிகளில் மூழ்கியவாறு இருக்கும் பலரை நாம் பார்க்கிறோம்.
வேலை, கல்வி, குடும்பம், நட்பு வட்டாரம் என பல காரணங்களுக்காக மின்னணுச் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். ஒரு கட்டத்தில் அச்சாதனங்கள் நம்மைக் கட்டுப்படுத்தும் நிலைமை வந்துவிடுகிறது.
அதன் பின்விளைவுகளை எதிர்நோக்க நாம் தயாராக உள்ளோமா என்பது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
மின்னணுச் சாதனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது குறித்து பலரிடம் விழிப்புணர்வு வரத் தொடங்கியுள்ளது.
அண்மைய காலமாகப் பலர் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ எனும் பழக்கத்தை மேற்கொள்கிறார்கள் என்று கருத்துக்கணிப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
உணவுப் பழக்கமுறையில் ‘டீடாக்ஸ்’ பின்பற்றி உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என பலவற்றையும் கடந்து, இப்போது, மின்னணுச் சாதனங்களில் இருந்து குறுகிய நேரம் நம்மை விடுவித்துக்கொள்வதற்கு ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் தனியார் நிறுவனமான ‘ஸ்டேட்டிஸ்டா’வின் ஆய்வுப் பிரிவு, கடந்த ஆண்டு நடத்திய கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் இணையத்தளம், மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்துவோரில் 32 விழுக்காட்டினர், அவற்றில் இருந்து தங்களைத் தற்காலிகமாக விடுவித்துக்கொள்ள அன்றாடம் இரண்டு மணி நேரம் இடைவேளை எடுத்துக்கொள்ளும் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
ஒருநாள் முழுவதும் இதுபோன்று ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்ய இயலாவிட்டாலும், சில மணி நேரங்கள், தொழில்நுட்பச் சாதனங்களைச் சார்ந்திருப்பதில் இருந்து தங்களைத் தற்காலிகமாக விடுவித்துக்கொள்ளலாம். எவ்வளவு நேரம் இடைவேளை எடுத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம்.
ஒரு முழு நாளிலிருந்து, ஒரு மாதம் முழுமையாக ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்பவர்களும் இருக்கிறார்கள்.
திறன்பேசி, தொழில்நுட்பச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இடைவேளை எடுத்துக்கொண்டு ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்துகொள்ளலாம்.
அவ்வாறு, திறன்பேசியை முழுமையாகப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாத ஒரு சூழலில், சமூக ஊடகத்தைத் திறந்துபார்க்காமல் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்துகொள்ளலாம்.
இதன்மூலம் நமக்குக் கிடைக்கும் பயன்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.
‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ மூலம் நாம் மின்னியல் சாதனங்களை எவ்வளவு சார்ந்துள்ளோம், அதனால் எவ்வாறு பாதிக்கப்படுகிறோம் என்பதை அறிந்துகொள்வதோடு உணரவும் முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மின்னியல் சாதனங்கள் இல்லாத பட்சத்தில், நம்மைச் சுற்றி இருப்போருடன் மகிழ்ச்சியுடன் உரையாடுவதற்கு நேரம் கிடைக்கிறது.
குடும்பத்தினரோடு பயனுள்ள வழியில் நேரத்தைச் செலவிடலாம். வேலையிலும் படிப்பிலும் கவனச்சிதறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். நண்பர்களிடையேயும் குடும்பத்தினரிடையேயும் உறவு மேம்படும்.
நாம் கவனச் சிதறலில் சிக்கிக்கொள்ள மாட்டோம். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் கவனித்து சரியான முடிவெடுக்க முடியும்.
அனைத்திற்கும் மேலாக மன உளைச்சல் வெகுவாக குறைய ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ வழிவகுக்கின்றது.
மின்னியல் சாதனங்களின் மூலம் பலவற்றைப் பார்த்து, நம் வாழ்க்கைக்குத் தொடர்புபடுத்திக்கொள்வதால், ஒருவர் அனாவசியமாக தன்னுடைய மனதை அழுத்தத்திற்கு இட்டுச் செல்கிறார்.
தொழில்நுட்பச் சாதனங்களை நம் அன்றாட நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக அகற்றுவதால், மன அமைதி பெறுகிறோம். புதிதாக ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்ய விரும்புவோருக்கு இது ஒரு பெரிய புதிர் அல்ல. அதற்கு நாம் முதலில் தொழில்நுட்பச் சாதனங்களை எவ்வளவு தூரம் சார்ந்துள்ளோம் என்பதை கண்டறியவேண்டும்.
ஒரு நாளைக்கு, ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு வாரத்திற்கு எவ்வளவு நேரம், எவ்வளவு நாள்கள் நாம் தொழில்நுட்பச் சாதனங்களில் இருந்து நம்மை தற்காலிகமாக விடுவித்துக்கொள்ளப் போகிறோம் என்பதைத் தீர்மானித்த பிறகு, ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ முறையைப் பின்பற்றவேண்டும்.
சில முறை ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்தபின், நாம் எவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டுள்ளோம் என்பதையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.
நல்ல முன்னேற்றம் கண்டால், நீண்ட காலத்திற்கு அதை மேற்கொள்ள திட்டவட்டமாக யோசிக்கத் தொடங்கலாம்.
மின்னியல் சாதனங்களில் இருந்து தங்களைத் தற்காலிகமாக விடுவித்துக்கொள்ளும் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் சிலர், அது எங்களால் முடியவே முடியாது என்றும் கூறுகின்றனர்.
‘ஹவுஸ் ஆஃப் சமோசாஸ்’ என்னும் கடையை தன்னுடைய குடும்பத்தோடு நடத்தி வரும் குமாரி நஜீரா ரோஸ்னி, 28, சில நாள்களுக்கு முன்பிலிருந்து ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்யத் தொடங்கிவிட்டார். இதைப் பற்றி கேள்விப்பட்டிருந்த அவர், இந்த ஆண்டிலிருந்து இதில் முழுவீச்சில் இறங்கியுள்ளார்.
அன்றாடம் சமூக ஊடகத் தளங்களில் நேரத்தைச் செலவிடுவது, நண்பர்களோடு அதில் உரையாடுவது என அவர் நேரத்தைச் செலவிட்டு வந்தார்.
வியாபாரத்தையும் பார்த்துக்கொண்டு, சமூக ஊடகத்திலும் அதிக நேரத்தைச் செலவிட்ட அவர், ஒரு கட்டத்தில் சோர்ந்து போனார்.
தற்போது வாரத்திற்கு ஒரு நாள் ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ செய்யும் இவர், அதிக நேரம் தூங்குவதாகவும், மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருப்பதாகவும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
நான்கு வயது மகனுக்குத் தாயாக இருக்கும் 32 வயது சுவாதி பன்னீர்செல்வம், இந்தியாவிலிருந்து வந்து சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்து, வீட்டு வேலைகளைப் பார்க்கவும், முக்கியமாக தன் மகனைக் கவனித்துக்கொள்ளவும் தன்னுடைய நேரம் முழுவதும் சென்று விடுகிறது என்று பகிர்ந்துகொண்டார்.
சமூக ஊடகத்தை அதிகம் பயன்படுத்தும் இவர், ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ மேற்கொள்வதால் இந்தியாவிலிருக்கும் தன்னுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர் ஆகியோருடன் தொடர்பு வைத்துக்கொள்ள முடியாது என்ற அவர், அதை மேற்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.
தன்னுடைய வேலை காரணங்களால் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் பொறியியலாளர் ராகேஷ், 26, ‘டிஜிட்டல் டீடாக்ஸ்’ தனது வழக்கத்துக்குப் பொருந்தாது என்கிறார்.
இவர் ஒரு நாட்டிலும், குடும்பத்தினர், வருங்கால மனைவி ஆகியோர் மற்றொரு நாட்டிலும் இருப்பதால், இவர் அன்றாடம் திறன்பேசி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இருந்தாலும் சில சமயங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாள்கள் நிறுத்தும் முயற்சியில் இறங்கப் போவதாகக் கூறியுள்ளார்.