நேர்த்தியான அறிவு,
நிறைய திறமைகள்,
நிதானமான முடிவுகள்..
சகிக்க முடியாமல்
ஒதுக்கப்பட்டு - பின்
ஒடுக்கப்பட்டிருக்கலாம்...
'துதித்தல்' தூண்டிலில் சிக்கி
மிதிக்கப்பட்டிருக்கவும் கூடும்..
அடுத்தடுத்து வலைகளை
அடுக்கடுக்காய் வீசியதும்,
வேறுவேறு சாயங்களை
காய காய பூசியதும் கூட
காரணமாயிருக்கலாம்,
வலைக்குள் கிடந்ததற்கும் - தன்
வண்ணம் தொலைந்ததற்கும்...!
அனிச்சையாய் அடிமையாக,
அதையே இயல்பாக்க..
'வானம்' பாவமென்றும்
'சிறகுகள்' போர்வையென்றும்
போதிக்கப்பட்டிருக்கலாம்..
காலத்தால் பழையதாகி
வலைகள் அறுந்து,
சாயங்கள் உதிர்ந்ததால்
சிறகுகள் சிலிர்த்து,
பிரபஞ்சம் அளந்தது..!!
இப்போதெல்லாம்..
அழுத்த நினைத்தாலே
முளைத்து எழுகிறது
மரமாக...
தந்திரமாய்
உயர்த்தப்படுபவை மட்டும்
கானல்நீர் கண்டு
மயங்கி விடுகிறது...
பெரும்பாலும்
உடைந்தும் விழுகிறது
வெயிலில் கருகி..!
- பனசை நடராஜன்