சிறுகதை
கி.சுப்பிரமணியம்
மலாய் இனத்தைச் சேர்ந்தவன் சலீம். பார்ப்பதற்கு பரிதாபமான தோற்றம் கொண்டவன். பதினான்கு வயதுச் சிறுவனுக்கு இருக்க வேண்டிய உடலமைப்பு இல்லாது, மெலிந்து, சற்று கூன் விழுந்த நிலையில், விட்டுவிட்டு இருமிக்கொண்டே, தன் செங்குத்தாக வானம் பார்த்து நிற்கும் தலைமயிரைச் சொறிந்த வண்ணம் இருப்பான்.
அவன்கொண்ட தொடர் இருமலால், அவனை, சலீம் டி.பி (காச நோய் சலீம்) என்றே எல்லோரும் கேலியாகவும் கேவலமாகவும் கூப்பிட ஆரம்பித்தனர். பாவம், அவன் தான் என்ன செய்வான்!
அவன் தந்தை ஒரு போலிஸ்காரர். எல்லாராலும் நன்கு மதிக்கப்பட்டவர். சலீமின் தாயோ வீட்டில் இருந்தபடி சலீமையும் அவன் இளைய சகோதரிகளையும் காத்து வந்தாள்.
சலீம் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். திறன் வளர்ச்சி குன்றியவன் என்பதால் அவனை பள்ளிக்கும் பெற்றோர் அனுப்பவில்லை.
அவன் வாழ்ந்தது சிங்கப்பூரின் பழைய எஸ்.ஐ.டி குடியிருப்புப் பகுதி. 1960-ல் பலர் இங்குதான் தாங்கள் வாழ்ந்த கம்பத்து வட்டாரத்தை விட்டு இத்தகைய புதிய சிமெண்ட் குடியிருப்புப் பேட்டைகளுக்கு மெல்ல வந்தனர்.
பத்து, ஓரடுக்கு வீடுகள் கொண்டதை ஒரு 'லயன்' என்று அழைத்தனர். ஒரு ஐம்பது லயன்கள் அப்பொழுது கட்டப்பட்டிருந்தன.
சலீம் தங்கியிருந்த வடக்கு மேட்டுப் பகுதி வீடுகளின் பின்புறம், காடாகவே இருந்தது. அங்கு புதர்களுக்கு மத்தியில், இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட கல்லாலான பதுங்கு குழிகள் சிதிலம் அடைந்த நிலையில் இருந்தன.
இந்தப் பகுதியில்தான் சலீம் பொழுதைப் போக்கிய வண்ணம் திரிந்து கொண்டிருப்பான். நண்பர்களற்ற அவனுக்கு அந்த காடுதான் எல்லாம்!
அங்கு காலையில் சென்று திரிந்துவிட்டு, பசி வந்தவுடன் மதியம் மெல்ல வீடு திரும்புவான். மதிய உணவிற்குப்பின் மீண்டும் வனவாசம்!
அந்த காட்டில், போரின்போது, மண்ணில் புதையுண்டு கிடந்த, பழுதடைந்த துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் சிலமுறை கண்டெடுக்கப்பட்டு, போலிசிடம் ஒப்படைத்துள்ளனர் அங்கு வசித்தோர்.
ஆயினும் சில உடைந்து சிதறிய சிறிய இரும்பு மற்றும் செம்பு போன்ற உலோகப் பொருட்கள், அங்கு அவ்வப்போது கொஞ்சம் புதைந்த நிலையில் கிடக்கும்.
சலீம் கண்களுக்கு இவை பலமுறை தென்பட்டுள்ளது. அப்படி கண்டு, பொறுக்கி எடுத்து, ஆவலுடன் வீட்டிற்கு எடுத்துச் சென்று, மதிய நேரத்தில் தவறாமல் அங்கு வரும் சீன காராங்கூனி கிழவனிடம், கொஞ்சம் சில்லறை காசுக்காக விற்று விடுவான். அதுபோன்ற தட்டுமுட்டு பொருட்களை வாங்கும் வியாபாரியை அன்று காராங்கூனி என்றே அழைத்தனர்.
பழைய பேப்பர், பழுதான ரேடியோ, பாட்டில்கள் என்று அவன் வாங்கும் பட்டியல் நீளும். எனினும் செம்புக்கு நல்ல தொகை கொடுப்பான். இதன்பொருட்டே பலர் செம்பால் செய்யப்பட்ட கம்பி போன்றவற்றை மற்ற இடங்களில் திருடி, இவன் போன்ற காராங்கூனியிடம் விற்பதும் உண்டு. செம்புக்கு அவ்வளவு கிராக்கி!
எது எப்படி இருந்தாலும் அந்த காட்டில் சலீம் அலைந்து திரிவதற்கு இந்த செம்பும் ஒரு காரணம்.
அந்த மேட்டுப்பகுதியை சில குடியிருப்பாளர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். சிறிய காய்கறி தோட்டங்கள் பயிரிடப்பட்டன, பலா, கொய்யா போன்ற மரங்களை நட்டு வளர்த்தனர்.
ஒரு பத்து பதினைந்து சிறிய கோழிப் பண்ணைகளும் மெல்ல எழுந்தன.
பாகார் கம்பி என்று அழைக்கப்பட்ட உலோக வேலிகள் அமைத்து அமைதியுடன் தங்களின் சிறிய பண்ணைகளை காத்துவந்தனர்.
ஒவ்வொரு பண்ணையிலும் சண்டை சேவல்கள் வளர்த்து வந்தனர். ஆதலால், மாலை நேரத்தில் சேவல் சண்டை நடக்க ஆரம்பித்தன. இதைப் பார்க்க மிகவும் ஆவல் கொள்வான் சலீம். மற்றவர்கள் கூட்டமாக நின்று சேவல் சண்டையைப் பார்த்து ஆர்ப்பரிக்க, கொஞ்சம் ஒதுங்கி நின்றே ஆட்டத்தைக் கண்டு ரசிப்பான். சில சமயம் மற்றவர் கேலிக்குப் பயந்து அங்கிருக்கும் மரத்தில் ஏறி கிளைகளில் அமர்ந்தபடி சேவல் சண்டையைக் கண்டுகளிப்பான்.
"நீ எதற்கு இங்கு வந்து நிற்கிறாய். போய்விடு இங்கிருந்து," என்று ஏசியபடி விரட்டினான் டோலா. இப்படித்தான் பலராலும் உதைக்கப்பட்ட பந்துபோல், தினமும் ஒதுக்கப்பட்டான் சலீம். பதிலேதும் கூறாது ஒதுங்கிக்கொள்வான். ஆனாலும் மற்றவரைக் காட்டிலும் அதிகம் திட்டி விரட்டுபவன் இந்த டோலா ஒருவன்தான்.
முப்பத்தைந்து வயதாகியும் இன்னும் திருமணமாகாது ஊரைச் சுற்றுபவன். அவனுக்கு அங்கு வாழ்ந்த பலருடனும் அடிக்கடி சண்டை வரும். சிலரை அடித்தும் இருக்கிறான். ஆள் கொஞ்சம் ஒல்லியாக இருந்தாலும், உயரமாகவும் வலுவாகவும் இருப்பான். அவனை பலர் ஏசி, சண்டையிட்டும் அவன் அடங்கியதாக இல்லை.
இத்தனைக்கும் தன் மகனை விரட்டும் விஷயம் தெரிந்த சலீமின் தந்தையும் டோலாவைக் கண்டித்து திட்டியும் உள்ளார்.
இதனால் அவர் மீதும் சலீம் மீதும் ஆத்திரமும் வஞ்சமும் கொண்டான் டோலா. அவர் போலிஸ்காரர் என்பதால் கொஞ்சம் அடங்கிப் போவதுபோல் பாவனை காட்டி சில நாள்களுக்கு அடங்கி நடந்துவிட்டு மீண்டும் சலீமை கண்டால் விரட்டுவான்.
சலீமை அவன் வெறுப்பதற்கு முக்கிய காரணம் அங்கு காட்டில் அவ்வப்போது கிடைக்கும் இந்த செம்புத் துண்டுகளே!
என்னதான் டோலா காட்டில் தேடினாலும், இதுபோன்ற செம்புச் சிதறல்கள் சலீம் கண்களுக்குத்தான் அதிகம் தென்படும்.
கண்ணில் பட்டால், ஆவலுடன் பொறுக்கி எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடிவிடுவான். இதைக் கண்டு ஏமாற்றமும் வெறுப்பும் அடைவான் டோலா.
டோலா செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சம் அல்ல. மற்றவர்களைப் பயமுறுத்துவதில் அவனுக்கு அப்படி ஒரு சுகம். அப்பொழுது, பொந்தியானாக் என்ற மலாய் பேய்ப்படத்தை பலராலும் திரையில் பார்த்து பேசப்பட்ட நேரம். அந்தப் படத்தைப் பார்த்து பயந்துபோயினர் பெண்கள் பலர். இதை நன்றாக பயன்படுத்திக்கொண்டான் டோலா!
இரவில் வெள்ளை நிற ஆடையை உடல் முழுதும் மறைத்த வண்ணம் ஒவ்வொரு வீட்டின் கண்ணாடி சன்னல் முன், இரு கைகளையும் பதித்து அப்படியே சிறிதுநேரம் நிற்பான். இதை உள்ளே இருந்து பார்த்த, பெண்கள் மற்றும் சிறுவர்கள், பயத்தில் போடும் கூச்சல் அந்தச் சுற்று வட்டாரம் எல்லாம் கேட்கும். இப்படியே ஊரைப் பயமுறுத்தி சுகம் கண்டவனை, பிடிக்க சிலர் முயன்ற போதெல்லாம், 'பேய்' காட்டிற்குள் ஓடிவிடும்!
சில இளையர்கள் சலீமின் தந்தையின் உதவியோடு, திட்டமிட்டு, இரவில் ஒருநாள் காட்டுக்குள் ஓடிய 'பேயை' விரட்டிப் பிடித்து உதைத்தபோதுதான், அவர்கள் சந்தேகப்பட்டதுபோல் பேயாக இரவில் நடமாடியது, டோலா என தெரியவந்தது.
அடியும் அவமானமும் தாங்காது அங்கிருந்து ஓடியவன், எங்கோ மறைந்து போய்விட்டான்.
பின்பு அவன் மலாக்காவில் யாரோ உறவினர் வீட்டில் இருக்கிறான் என்ற செய்தியைக் கேட்டு பலரும் நிம்மதி அடைந்தனர். இதில் சலீமிற்குத்தான் அதிகம் நிம்மதி.
ஆனால் அந்த நிம்மதியும் சில மாதங்களே! டோலாவின் உறவினர் மீண்டும் சிங்கப்பூருக்கு அவனை அழைத்து வந்து, இங்கு குடியிருந்த பெரியவர்களிடம் பேசி சமரசம் செய்து வைத்தனர். அதன் பின்னும் டோலா அதிகம் திருந்தியதாகத் தெரியவில்லை. அவன் மனதில் சலீம் மீதும் சலீமின் தந்தை மீதும் வஞ்சம் இருந்துகொண்டே இருந்தது.
இப்படியே சில காலம் சென்றபின், ஒருநாள் காட்டில் செம்புப் பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கும் போது, டோலா ஒரு கனமான பழைய இரும்புப் பொருளுடன் சலீமை நோக்கி வந்தான். இதை கண்ட சலீம், தன்னை தாக்கவே டோலா வருகிறான் என்ற பயத்தில் ஓட்டம் எடுக்கத் தொடங்கினான்.
"சலீம்.. ஓடாதே நில்," என்று கூவியும், சலீம் நின்றபாடில்லை.
"உனக்குக் கொடுப்பதற்கே இந்தப் பொருளைக் கொண்டு வந்தேன் பயப்படாதே," என்று மீண்டும் உரக்கக் கூவிச்சொன்னதும், சலிம் ஓட்டத்தை நிறுத்தி தயங்கியபடி நின்றான்.
சலீமின் அருகில் வந்த, டோலா, கையடக்கமாக வைத்திருந்த, ஏதோ கொஞ்சம் துருப்பிடித்ததுமான உலோகப் பொருள் ஒன்றை எடுத்து சலீமிடம் நீட்டினான். அந்தப் பொருளின் மையப்பகுதியில், ஒரு செம்பு வளையம் தென்பட்டது.
"இதை உடைத்து எடுத்தால், நடுவில் இருக்கும் செம்பு வளையத்தை நல்ல விலைக்கு விற்கலாம். ஆனால் இதை உடைக்க எடுக்க எனக்கு சோம்பலாக இருக்கிறது. வேண்டுமானால் நீ உன்னிடம் இருக்கும் சில செம்புப் பகுதிகளை எனக்கு கொடுத்துவிட்டு, இதை நீ பெற்றுக்கொள்," என்றான்!
டோலா மீது உள்ள பயம் ஒருபுறம் இருக்க, அவன் கையில் இருந்த பொருளின் செம்புப்பகுதி சலீம் கண்களில் பட்டது.
"அதிகம் யோசிக்காதே. எவ்வளவு கனமாக இருக்கிறது பார்த்தாயா? உடைத்து எடுத்தால் உள்ளே அதிகம் செம்புப் பகுதி இருக்கும். இதை நீயே எடுத்துக்கொள். ஆனால் பதிலுக்கு உன் பையில் இருக்கும் சில செம்புப் பொருள்களை எனக்குக் கொடு," என்று மீண்டும் சற்று மிரட்டும் பாணியில் சலீமின் முகத்தருகே சென்று பேசினான்.
டோலாவின் மீது கொண்ட பயம் ஒருபுறம் இருந்தாலும், அவன் காட்டிய பொருளில் அதிகம் செம்பு இருக்கும் என்ற பேராசையும், சலீமை பற்றிக்கொண்டது.
சரி என்று மெதுவாக தலையை அசைத்தபடி, சற்று பயத்துடன், தன் அரைக்கால் சட்டையிலிருந்து சில அழுக்கேறிய செம்புத் துண்டுகளை எடுத்து டோலாவிடம் கொடுத்துவிட்டு, அந்த கையடக்கமான, உலோகப் பொருளை பெற்றுக்கொண்டு, வீடு நோக்கி விரைவாக நடந்தான்.
சலீம் வீடு சென்ற நேரம், அவன் தாயும் இரு தங்கைகள் மட்டுமன்றி, அவன் தந்தையும் வழக்கத்துக்கு மாறாக வேலையிலிருந்து விரைவாக வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.
உள்ளே வந்த சலீமைக் கண்டவுடன் அவருக்குக் கோபம் தலைக்கேறியது.
"நாளெல்லாம் அந்தக் காட்டில் சுத்துவதிலேயே இருக்கிறாயே. உன் அம்மாவிற்கு துணையாய் வீட்டில் இருக்கமாட்டாயா?" என்று திட்ட ஆரம்பித்தார்.
தன் மகனின் உடல்நிலையையும் அவனின் அறிவு வளர்ச்சி குன்றிய நிலையையும் நினைத்து மிகவும் கவலைகொள்வார் அவர்.
போலிஸ் வேலையில் தான் பெறும் குறைவான சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்த அந்த மனிதர் படும்பாடு அதிகம்!
"அது என்ன உன் கையில் வைத்திருக்கிறாய்?" என்று சற்று ஆர்வத்துடன் கேட்டார் சலீமின் தந்தை.
"எனக்குத் தெரியவில்லை, காட்டில் கண்டெடுத்த டோலா, இதை என்னிடம் கொடுத்தான்," என்று சற்று தாழ்வான குரலில் பதில் சொன்னான் சலீம்.
"ஓ.. இப்பொழுது டோலா உனக்கு நண்பனாகிவிட்டானா. அவன் உன்னை விரட்டியதை மறந்துவிட்டாயா?" என்று மகனை பார்த்து மீண்டும் திட்ட ஆரம்பித்தார் சலீமின் தந்தை.
சிறிது நேர மௌனத்தின்பின்.. "என்னிடம் இருந்த சில சிறிய செம்புப் பொருள்களை எடுத்துக்கொண்டு இதை மாற்றாக கொடுத்தான். இந்தப் பொருளின் நடுப்பகுதியில் இருக்கும் செம்புப் பாகங்கள் அதிகம் இருப்பதுபோல் தெரிந்ததால் ஒத்துக்கொண்டேன்," என்றான் சலீம் தயங்கியபடி.
"இதை உடைத்து எடுக்கும் சிரமத்தை கருதியே உன்னிடம் தள்ளிவிட்டுவிட்டான். நீ சரியான ஏமாளி," என்று மீண்டும் சலீமை திட்டிவிட்டு, சலீம் கொண்டுவந்த அந்த உலோகப் பொருளை கையில் வைத்துப் பார்த்தார்.
"இது என்னவென்றே தெரியவில்லையே. சரி, காராங்கூனி வரும் நேரம்தான் இது. அவனிடம் இதை கொடுத்து காசு வாங்கிக்கொள்," என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
தந்தை சொன்னதால் அந்த உலோகப் பொருளை தூக்கிக்கொண்டு வெளி வாசலில் வந்து அமர்ந்தான் சலீம்.
சிறிது நேரத்தில் தூரத்தில், தோலின் குறுக்கே நீண்ட கம்பும், அதில் இருபுறமும் கூடை போன்ற ஒன்றை சுமந்த வண்ணம் அந்த சீன காரோங்கூனி கிழவன் வருவதைக் கண்டு, ஆவலுடன் எழுந்து நின்று, அவன் வருகைக்காக காத்திருந்தான் சலீம்.
அந்த காராங்கூனி கிழவன் ஒவ்வொரு வீட்டின் வாசலின்முன் நின்று ஏதேனும் வேண்டாத சாமான்கள் இருக்கின்றனவா என வழக்கம்போல் மலாய் மொழியில் கூவிக் கேட்பான்.
அந்த வட்டாரத்தில் வாழும் பலருக்கும் இந்த காராங்கூனியை நன்கு தெரியும். அவர்களிடம் விற்பதற்கு எந்தப் பொருளும் இல்லையெனில், அடுத்த வீட்டு வாசலில் வந்து நின்று அதே வசனத்தை பேசுவான். இது அவன் தொழில் முறை. இப்படிப்பட்ட தொழிலை அன்று சீனர்களே அதிகம் செய்தனர். அப்படி காராங்கூனியாக ஆரம்பித்து, மெல்ல பாடுபட்டு பெரும் வணிகரானோரும் பலர் அக்காலத்தில் இருந்தனர்.
பொறுமையாக காத்திருந்த சலீமின் வாசல் வந்து சேர காராங்கூனி கிழவனுக்கு இருபது நிமிடமானது. காராங்கூனி முகத்தருகே அந்த உலோகப் பொருளை நீட்டினான் சலீம்.
சலீம் அவ்வப்போது காட்டில் பொறுக்கி கிடைத்த செம்பு, பித்தளை போன்றவற்றை இந்த காராங்கூனியிடம் விற்பதால், இருவருக்கும் நல்ல அறிமுகம் இருந்தது.
சலீம் கொடுத்த உலோகப்பொருளை தன் வயோதிக கண்களைச் சுருக்கிய வண்ணம் கைகளால் ஏதோ ஓர் அறிவியல் நிபுணர் பாணியில், உருட்டிப்பார்த்தான். அந்தப் பொருளின் மையப் பகுதியில் மங்கலாக தோற்றம் தந்த செம்பு வளையம் அவன் கண்களிலும் தென்பட்டது.
"இதை இப்படியே வாங்கிக்கொள்ள முடியாது. வேண்டுமென்றால் இதை உடைத்து செம்புப்பகுதியைப் பிரித்து எடுத்து வா. அதை நிறுத்துப் பார்த்து பணம் தருகிறேன்," என்று சொல்லியபடியே மீண்டும் அப்பொருளை சலீமிடமே கொடுத்துவிட்டு, அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான் காராங்கூனி.
சற்று குழப்பத்துடன் நின்றுகொண்டிருந்த சலீம், சிறிது நேரத்தில் வீட்டிற்குள் சென்றான்.
அவன் கையில் இன்னும் அந்தப் பொருளோடு நிற்பதை அவன் தந்தை பார்த்துவிட்டார்.
"ஏன் இன்னும் கையில் வைத்துக்கொண்டு இருக்கிறாய். காராங்கூனி வேண்டாம் எனச்சொல்லி விட்டானா," என்று சற்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
கைகளில் வைத்திருந்த பொருளை மெல்ல தரையில் வைத்துவிட்டு ஓர் ஓரத்தில் உட்கார்ந்து, தன் தலையைச் சொரிந்து கொண்டே இருமினான் சலீம்.
சலீமின் தாய் தேநீர் தயாரித்துக்கொண்டே பேச ஆரம்பித்தாள்.
"இந்த காராங்கூனி கிழவன் இப்படித்தான். சில பொருள்களை அவன் வாங்குவான் என நினைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று விடுகிறான்," என்று நொந்துகொண்டே, தயாரித்த தேநீரை கணவனுக்கு கொண்டுவந்து கொடுத்தாள்.
ெமளனமாக மூலையில் முடங்கிக் கிடந்த சலீம்,
"அவன் வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளை உடைத்து, செம்புப் பகுதியைப் பிரித்து எடுத்துத் தந்தால், அதற்கான பணத்தைத் தருவதாகச் சொன்னான்," என்று சொல்லிக்கொண்டே தன் போலிஸ்கார தந்தை வைத்திருக்கும் இரும்புச் சாமான்களின் பெட்டியைத் திறந்து, அந்தப் பொருளை உடைத்திட சுத்தியும் ஓர் உளியையும் கையில் எடுத்துக்கொண்டு ஓர் ஓரமாக அமர்ந்து அந்தப் பொருளை உடைத்தெடுக்க ஆயத்தமானான்!
மேசையில் தேநீர் அருந்தியவண்ணம் அமர்ந்திருந்த சலீமின் தந்தை மகனை உற்று நோக்கினார். இருமிக்கொண்டே அந்தப் பொருளை உடைப்பதற்கான இடத்தைத் தடவி ஆராய்ந்தபடி பார்த்துக்கொண்டிருக்கும் மகனைப் பார்த்த தந்தையின் உள்ளம் நெகிழ்ந்தது.
"பொறு சலீம். உடைக்கிறேன் என்று உளியால் உன் கையை காயப்படுத்திக்கொள்ளாதே," என்று சொல்லி சலீம் உட்கார்ந்திருந்த பக்கம் வந்தார்.
சலீமின் தாயும் சலீமிற்கும் மற்ற பிள்ளைகளுக்கும் இன்னும் கொஞ்சம் தேநீர் தயாரிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள்.
சலீமின் அருகில் அமர்ந்த அவன் தந்தை மீண்டும் அந்தப் பொருளைப் பார்வையிட்டார்.
"இது ஏதோ போர்க் காலத்து சாமான்களின் ஓர் உடைந்த பகுதி போல் தெரிகிறது," என்று தன் மனைவியிடம் சொல்லிக்கொண்டே அதை உடைத்தெடுக்க ஆயத்தமானார்.
"சரி இதை உடைத்து செம்புப் பகுதியைப் பிரிக்கிறேன். நீ வெளியில் போய் காராங்கூனியை அழைத்து வா," என்று சொல்லவே, சலீமும் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
சற்று நேரம் சென்றபின் உளியை அப்பொருளின்மேல் வைத்து சுத்தியால், அதன் நடுப்பகுதியில், ஓங்கி ஓர் அடி அடித்தார் சலீமின் தந்தை. அவ்வளவுதான்..
'டமார்' என்ற காதை செவிடாக்கும் மிகப் பெரிய சத்தத்துடன் வெடித்தது அந்தப் பொருள்!
ஆஆஆ.... என்ற அலறல் சத்தத்துடன் சலீமின் தந்தை ஒருபுறம் தூக்கி எறியப்பட்டார். சலீமின் தாயும் அலறியபடி கீழே விழுந்தாள்.
வீடு முழுக்க புகை மண்டலம். வீட்டின் மேல்கூரைப்பகுதி உடைந்து கீழே விழுந்து எங்கும் தூசும் புகையும் பரவியது.
ஆம்! வெடித்த பொருள் ஒரு இரண்டாம் உலகப்போரின் போது புதையுண்டு கிடந்த ஒரு கையெறி குண்டு!
இந்தப் பெரிய சத்தம் வெகுதூரம் வரை கேட்டது. அதிர்ந்துபோன அக்கம்பக்கத்தார் ஓடி வந்தனர் உதவிக்கு. வெடித்துக் கொட்டிய சிமென்ட் சிதறல்களுக்கிடையே மூச்சுப் பேச்சின்றி கிடந்தார் சலீமின் தந்தை.
அந்தோ பரிதாபம்! அவரின் இடதுகை துண்டிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தது. பக்கத்தில் அவர் மனைவியும் காயமடைந்து வலியால் முனகிக்கொண்டு கிடந்தாள். அவளின் தொடைப்பகுதியில் ஆழமான காயமேற்பட்டு இரத்தம் கசிந்தது.
நல்லவேளையாக அவர்களின் இரண்டு பெண்பிள்ளைகளும் இரண்டு வீடு தாண்டி விளையாடிக்கொண்டிருந்தனர். காராங்கூனியைத் தேடிச்சென்ற சலீமும் வெடிச்சத்தத்தால் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்து வீடு நோக்கி ஓடி வந்தான்.
போலிஸ், ஆம்புலன்ஸ் மற்றும் செய்தியாளர்கள் என்று விரைந்து வந்தனர். பெரிய கூட்டம் கூடிவிட்டதால் போலிஸ் கூட்ட கட்டுப்பாட்டில் இறங்கினர்.
சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் இருவரையும் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தது. கூடவே துண்டிக்கப்பட்ட சலீமின் தந்தையின் கையையும் எடுத்துச் சென்றனர்.
கூட்டம் மெல்ல பேசிக்கொண்டே கலைந்து சென்றது.
"வெடித்தது கையெறி குண்டு என்கிறார்களே?" என்றான் ஒருவன்.
"எல்லாம் இந்த தரித்திரம் பிடித்த சலீமினால் வந்த கேடு," என்றான் மற்றொருவன்.
"இந்த டோலா பயல்தான் வேண்டுமென்றே வெடிகுண்டு என்று தெரிந்தும் ஏமாற்றி சலீமிடம் கொடுத்தான் என்றும் சொல்கிறார்கள்," என்றான் இன்னொருவன்.
"இவர் போலிஸ்காரர் ஆயிற்றே. சலீம் கொண்டு வந்தது வெடி குண்டு என்று எப்படி தெரியாமல் போயிற்று," என்று மேலும் ஒருவன் கேட்டான்! அந்த வட்டாரம் முழுக்க இதே பேச்சுத்தான்.
பலரும் தன்மீது சந்தேகத்துடன் பார்ப்பதும், அவன் காதுபட, அவன் தான் அது கையெறி குண்டு என்று தெரிந்தே சலீமிடம் கொடுத்தான் என்று பேசுவதையும் கேட்டு கவலையும் ஆத்திரமும் கொண்டான் டோலா.
போலிசும் அவனை விசாரணைக்கு உட்படுத்தியது. இதனால் வெறுப்படைந்தவன், பழையபடி மலாக்காவிற்கே நிரந்தரமாக சென்றுவிட்டான். உண்மையில் படிப்பறிவற்ற டோலாவிற்கும் இது ஒரு கையெறி குண்டு என்பது தெரியாது.
மருத்துவமனையில் சில காலம் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் சலீமின் தந்தை. துண்டிக்கப்பட்ட கையை உடலோடு சேர்த்துவைக்க எவ்வளவோ முயன்றும் மருத்துவ குழுவினரால் இயலவில்லை. போலிசில் வேலைசெய்தும் ஒரு பழைய கையெறி குண்டை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாமல் போனதற்கு அவர் மீது குற்றம் சுமத்தி விசாரணை நடத்தினர்.
ஆயினும் அவரின் நிலையைக் கண்டு இறங்கி, விசாரணை கைவிடப்பட்டு, அவர் பணிபுரிந்த போலிஸ் துறையிலேயே ஓர் எழுத்து வேலைக்கு அமர்த்தப்பட்டார். அவரின் நிலையைக் கண்டு அனுதாபத்தால், ஊழியர் பலர் நிதி திரட்டி செயற்கைக் கையொன்றை பொருத்த உதவினர். சலீமின் தாயும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாள். அவளின் தொடைப் பகுதி மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்டிருந்தும் எப்படியோ தேறிவிட்டாள். காலம் உருண்டோடியது.
இப்பொழுது நிலைமை அமைதியானது. காலையில் சிறிய தோல்பையைச் சுமந்த வண்ணம் சலீமின் தந்தை அசையாத செயற்கைக் கையுடன் வேலைக்குச் செல்வதை கதவோரம் நின்று கண்கலங்கி பார்த்துக்கொண்டிருப்பான் சலீம். தந்தையின் இந்த துயர நிலைக்கு தானே காரணம் என்ற குற்ற உணர்வு அவனை கண்கலங்க செய்தது. அவர் சென்றதும் வெளியில் வந்து நின்றான். தூரத்தில் தெரியும் காடு அவன் கண்களில் பட்டது. ஒரு காலத்தில் செம்புக்காக பொழுதெல்லாம் அலைந்து திரிந்த அந்தக் காட்டை இப்பொழுது வெறுத்து எரித்தனஅவன் கண்கள்.