மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இம்மாத இறுதியில் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை புரிவார் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஸாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் திங்கள்கிழமை (ஜனவரி 16) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்த பின்னர் செவ்வாய்க்கிழமை அவர் தனது அறிக்கையில் அன்வாரின் பயண விவரத்தை வெளியிட்டார்.
திரு அன்வார் பிரதமர் என்ற முறையில் இந்தோனீசியாவுக்கு இம்மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் முதல் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டார். சிங்கப்பூர் அவரது இரண்டாவது வருகையாக அமையும்.
டாக்டர் விவியன் நாளை புதன்கிழமை வரை மூன்று நாள் பயணமாக மலேசியா சென்றிருக்கிறார். திரு அன்வார் நவம்பர் மாதம் பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர் அவர் மேற்கொள்ளவிருக்கும் முதல் அதிகாரத்துவ சிங்கப்பூர் பயணம் இது.
டாக்டர் விவியனைச் சந்தித்தபோது தாங்கள் இருவரும் இருநாடுகளுக்கும் இடையிலான உன்னத, நீண்டகால உறவுகளை மறுஉறுதிப்படுத்தியதாக திரு ஸாம்ப்ரி குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூர்-மலேசியா உறவை இன்னும் அதிகமாக வலுப்படுத்துவது குறித்து இருவரும் கலந்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இம்மாத இறுதியில் மலேசியப் பிரதமரின் சிங்கப்பூர் வருகை குறித்தும் சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் மார்ச் மாத உத்தேச மலேசிய வருகை குறித்தும் டாக்டர் விவியனுடன் பேசியதாக திரு ஸாம்ப்ரி கூறினார்.
மலேசியாவின் புதிய ஐக்கிய அரசாங்கத்தின்கீழ் இருநாடுகளின் தற்போதைய உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டதாக திரு ஸாம்ப்ரி கூறினார்.