கோலாலம்பூர்: மலேசிய நாட்டில் நேற்று மட்டும் 217 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் இடம்பெற்றதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
இதையும் சேர்த்து அந்நாட்டில் இந்த கொடிய நோய்க் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 3,333ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், ஒரே நாளில் மேலும் மூன்று பேர் இறந்து மரண எண்ணிக்கையும் 53ஆக உயர்ந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளான 60 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, மலேசியாவில் இந்த நோயிலிருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 24.8% என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றபடி, இந்தக் கிருமித்ெதாற்றுக்கு ஆளானவர்களில் 108 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் இவர்களில் 54 பேருக்கு உயிர்க்காப்புக் கருவியின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
இந்நிலையில், நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் புனித ரமலான் மாதத்துக்கும் நீட்டிக்கப்படுமானால் ரமலான் சந்தைகள் நடத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்று மலேசியாவின் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் தற்பொழுது அமலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 17வது நாளாக நீடிக்கிறது. இது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.
தற்போதைய நிலையில் மலேசியாவின் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை இம்மாதம் 14ஆம் தேதிவரை நடப்பிலிருக்கும்.
அங்கு புனித நோன்பு மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு துறக்கும் நேரத்தில் உணவு உண்ண ஏதுவாக ரமலான் மாத சந்தைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இது குறித்துப் பேசிய டாக்டர் இஸ்மாயில், “நடமாட்டக் கட்டுபாடு ஆணை அமலில் இருக்கும்வரை ரமலான் சந்தைககளை நடத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம்,” என்றார்.
“அதன்பின்னர், அந்த ஆணை நீடிக்கப்படவில்லை என்றால், தேசிய பாதுகாப்பு மன்றம் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை அறிக்கை வெளியிடப்படும்.
“இது ரமலான் மாத சந்தைகள் இருக்குமா என்பதைத் தெளிவுபடுத்தும்,” என்றும் டாக்டர் இஸ்மாயில் தெரிவித்தார்.